எஸ். வெங்கடேஷ்வரன்
சமூகத்தில் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள சூழலில் நிகழ்ச்சிகளுக்கு மேலும் பலர் நேரடியாகச் செல்வதற்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளைச் சற்று தளர்த்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, 1,000 பார்வையாளர்களுடன் கூடிய முதல் கலை நிகழ்வாக நகைச்சுவைக் கலைஞர் குமாரின் 'குமார் அன்மாஸ்க்ட்' (Kumar Unmasked) நிகழ்வு மரினா பே சேண்ட்ஸ் அரங்கில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் தொடங்கி இம்மாதம் 26ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நகைச்சுவை நிகழ்வில், கொரோனா கிருமித்தொற்றால் சமூகத்தில் ஏற்பட்ட புது வாழ்க்கைமுறைகள் குறித்த நகைச்சுவை இடம்பெறுகிறது என்றார் திரு குமார், 53.
"தற்போதைய சூழலில் ஒருவரின் வாழ்வில் நகைச்சுவை மிக முக்கியம் என்று நினைக்கிறேன். பலவற்றை எளிமையான கண்ணோட்டத்தில் பார்க்க அது உதவுகிறது. முப்பது ஆண்டுகளாக என் ரசிகர்களாக இருப்பவர்களுக்குத் தெரியும். யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில் என் நகைச்சுவை பாணி இருக்காது," என்றார் அவர்.
அண்மையில் இனவாதம் தொடர்பான சம்பவங்கள் நடந்துள்ளதை நினைவுகூர்ந்த குமார், இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள பெற்றோரின் பங்கு மிக முக்கியம் என்று குறிப்பிட்டார்.
"வீட்டில் தவறான முறையில் பேசுவதை நிறுத்தவேண்டும். தவறான சிந்தனைகள் அங்குதான் முளைக்கின்றன. பிள்ளைகள் வளரும் சூழல் மிக முக்கியம்," என்றார் திரு குமார்.
கொரோனா நோய்ப்பரவல் காலம், தம்மைப் போன்ற கலைஞர்களுக்குப் பெரும் அடியாக இருந்தது என்றும் தற்போது நேரடி நிகழ்ச்சிகள் நடப்பது வரவேற்கத்தக்கது என்றும் சொன்னார் திரு குமார். தமது நிகழ்ச்சியைப் பார்க்க வருபவர்கள் நிச்சயம் வயிறு குலுங்கச் சிரித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார்கள் என்றும் நம்பிகையளித்தார் இவர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிதித் திரட்டுக்கான ஒரு கலை நிகழ்ச்சி, இவ்வாண்டு மார்ச் மாதம் எஸ்பிளனேட் அரங்கில் 'லெட்ஸ் ஜோகெட் & கோரெங் டுகெதர்', ஏப்ரல், மே மாதங்களில் கேபிட்டோல் அரங்கில் 'ஐ எம் குமார்' ஆகிய நிகழ்ச்சிகளை திரு குமார் படைத்துள்ளார்.
பிரம்மாண்டமாக நடக்கும் 'குமார் அன்மாஸ்க்ட்' நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள், சிஸ்டிக் இணையத்தளத்தில் $58 முதல் $113 வரையிலான விலையில் விற்பனையாகின்றன. இந்த 90 நிமிட நிகழ்ச்சிக்கு 'பேஸ் என்டர்டெய்ன்மென்ட் ஏஷியா', 'ரா ரா புரொடக்ஷன்ஸ்' ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.

