கட்டடக்கலையை பற்றிய அறிவுத் திறனை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டால் போதும் என்ற எண்ணத்துடன் ஆசிரியர் துறையில் அடி எடுத்துவைத்தார் தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி, பசுமைக் கட்டடக்கலை ஆசிரியர் திருமதி சௌம்யா சதீஷ். அவரது கண்ணோட்டத்தையே மாற்றியது சேர்ந்த ஒரு மாதத்தில் நடந்த ஒரு நிகழ்வு.
கல்லூரியின் அறிமுக வாரத்தின்போது ஒரு மாணவனின் தந்தை திடீரென விபத்தில் காலமான செய்தி திருமதி சௌம்யாவிற்கு தெரியவந்தது. குடும்பத்தைத் தாங்கிப் பிடித்த தந்தை இறந்த மூன்றாம் நாளே பள்ளி திரும்பினார் அந்த மாணவர்.
இவரைப் போலவே ஒவ்வொரு மாணவரும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்கின்றனர், ஆசிரியர் என்ற முறையில் தமது கடமை கற்பித்தலுக்கு மேலானது என்பதை அப்போது திருமதி சௌம்யா உணர்ந்தார்.
2015ஆம் ஆண்டு ஆசிரியர் தொழிலைத் தொடங்கிய இவர், ஆசிரியர்களுக்கான அதிபர் விருதை பெற இவ்வாண்டு முன்மொழியப்பட்ட 17 பேரில் ஒருவர். பசுமைக் கட்டடக் கலையில் குறிப்பாக பெரும் ஆர்வம் கொண்ட திருமதி சௌம்யாவின் தாரக மந்திரம், "பகிரும்போது பன்மடங்கு பெருகும் அறிவு."
சுற்றுப்புற நிலைத்தன்மையை கட்டிக்காக்க கட்டடத் துறையில் மாற்றங்கள் வேண்டும் என்று நம்பும் இவர், பொறுப்புள்ள சுற்றுப்புற நிலைத்தன்மையின் மீது அக்கறைகொண்ட மாணவர்களைத் தமது கற்பித்தலின் வழி உருவாக்க முனைகிறார்.
இவர் வலியுறுத்துவது முக்கியமாக ஒன்றைத்தான்.
"ஓர் ஆசிரியராக முதலில் மாணவர்களைப் புரிந்துகொண்டு அவர் களது உடல்நலனையும் மனநலனையும் உறுதி செய்ய வேண்டும். படிப்பு, கற்றல் என்பது எந்த வயதிலும் பெறக் கூடியவை. ஆனால் பிரச்சினைகளைச் சமாளித்து தீர்வுகண்டு நிம்மதி பெற்றால்தான் அவர்களால் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த முடியும்."
மன அழுத்தத்தால் தவித்த மாண வரை மனநல சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது, வீட்டில் பிரச்சினைகளைச் சந்தித்து வந்த மாணவரை தீபாவளி அன்று தமது வீட்டிற்கு விருந்திற்கு அழைப்பது, மாணவரின் வீட்டிற்குச் சென்று பலகாரங்கள் தந்து ஆதரவுக் கரம் நீட்டுவது என இவரது சிறுசிறு செயல்கள் மாணவர்களின் மனதில் இடம் பிடித்தன.
அவர்களது ஒரு வழிகாட்டியாகவே மாறியிருக்கிறார் திருமதி சௌம்யா.
சென்ற ஆண்டு கிருமித்தொற்று தலைதூக்கியபோது ஆசிரியர்களுக்கு பல புதிய சவால்களும் வந்து சேர்ந்தன.
மாணவர்களை நேரடியாகச் சந்தித்து உரையாடி, கேள்விகள் கேட்டு, அவர்களது கேள்விகளுக்கு பதில்கூறிப் பழகிய திருமதி சௌம்யா தொழில்நுட்ப உத்திகளைக் கற்று, மாணவர்களின் கவனத்தை பெற முயற்சி எடுத்தார்.
"இக்கடினமான சமயத்தில், மாணவர்கள் எந்நேரமும் என்னை தொடர்பு கொண்டு பேசலாம் என்பது நான் அதிகம் வலியுறுத்தும் ஒன்று. இணையம் வழியே பாடங்கள் நடப்பதால் என்னுடன் நேரடித் தொடர்பு இல்லாமல் போகலாம். ஆனால் மாணவர்கள் ஒருபோதும் தனிமையில் உதவி அளிக்க ஆளின்று தவிக்கக்கூடாது," என்றார் திருமதி செளம்யா.

