கி. ஜனார்த்தனன்
பல சவால்களையும் வெற்றிகொண்டு 85 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கிவரும் தமிழ் முரசில் 60 ஆண்டு காலத்துக்கும் மேல் பணியாற்றி வரும் மூத்த ஊழியர் திரு எம். நடராசன்.
81 வயதில் இன்றும் தமிழ் ஊடகத்துறைக்குப் பங்காற்றும் இவர், காலத்திற்கு ஏற்ப திறன்களை மேம்படுத்திக்கொள்பவர்.
கணினி யுகத்திற்கு முன்பு செய்தித்தாளின் எழுத்துகள் ஒவ்வொன்றாக எடுத்துச் சேர்க்கப்படும். சேர்க்கப்பட்ட எழுத்துகள் பக்கங்களாக வடிவமைக்கப்படும்.
தமிழ் முரசு நிறுவனத்தில் 18 வயதில் இப்படி எழுத்துகளைக் கோக்கும் பணியைத் தொடங்கிய திரு நடராசன், பக்க வடிவமைப்பாளராக, மேற்பார்வையாளராக, கணினியில் அச்சேற்றிய செய்திகளை வெட்டி ஒட்டி பக்கங்கள் தயாரிப்பவராக, கணினியில் செய்திகளை அச்சேற்றுபவராக, விளம்பரங்களை வடிவமைப்பவராக, விளம்பரச் செய்திகளை எழுதுபவராக செய்திகளைத் திருத்தி பக்கம் வடிவமைக்கும் துணையாசிரியராக, பல்வேறு பணிகளைப் புரிந்து ஓய்வு பெற்ற பின்னர், திருத்தாளராக இன்றுவரையில் தொடர்ந்து தமிழ் முரசுக்கு சேவையாற்றும் நீண்டகால ஊழியர்.
தொடக்க காலத்தில்..
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், தேவர்பட்டி, சிலட்டூர் கிராமத்தில் பிறந்த திரு நடராசன், இரு தம்பிகள், ஒரு தங்கையுடன் வளர்ந்தார். எட்டாம் வகுப்பு வரை படித்த இவர், தமது ஊர் மக்கள் பலரையும் பின்பற்றி பிழைப்பு தேடி சிங்கப்பூருக்கு வந்தார். 1955ஆம் ஆண்டில் 15 வயதில், ரஜுலா கப்பலில் மலேசியாவின் பினாங்கு நகரை அடைந்து பின் கார் மூலமாக சிங்கப்பூர் வந்தார். சாதாரண கூலி வேலையைச் செய்வதைவிட ஒரு கைத்தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அச்சுக்கோப்பாளராக சம்பளம் இல்லாமல் ஐந்து மாதங்கள் பயிற்சி பெற்றார். அந்தக் காலத்தில் இந்த வேலைக்குப் போட்டி அதிகம். எனினும், வேலைத் திறனும் உறுதியும் மிக்க திரு நடராசனுக்கு பயிற்சி முடிந்ததுமே வேலை கிடைத்தது. இடையில், தந்தை இறந்துவிட குடும்பப் பொறுப்பை முழுமையாகச் சுமக்க வேண்டி வந்தது. 1958ல் தமிழ் முரசு பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தார்.
தொடக்கத்தில் லாவண்டர் ஸ்திரீட்டில் அமைந்திருந்த தமிழ் முரசு அலுவலகம், பின்னர் ஜெண்டிங் லேன், கம்போங் அம்பாட், சின் சுவீ ரோடு, அதன் பின்னர் மீண்டும் ஜெண்டிங் லேனுக்கு மாறி தற்போது தோ பாயோவிலுள்ள எஸ்பிஎச் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்கள் அத்தனையிலும் பணியாற்றிய பழுத்த அனுபவம் திரு நடராசனுக்கு உண்டு.
தமிழவேள் கோ.சாரங்கபாணி
"வெள்ளை வேட்டி, சட்டையில் நெடிய, உயர்ந்த, மிடுக்கான தோற்றம், கம்பீரமான நடை, உறுதியான பேச்சு. தமிழவேள் கோ சாரங்கபாணியைப் பார்க்கும்போது, ஓர் அரசியல் தலைவரைப்போலவே இருப்பார். தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட திரு சாரங்கபாணி, சிறந்த தலைவராகவும் தோழராகவும் இருந்தவர். செய்தியாளர்களையும் எழுத்தாளர்களையும் ஆதரித்து வளர்த்தவர். அமைதியாக, நிதானமாக, சமூக அக்கறையுடன் செயல்பட்ட தலைவர். அவருக்கு ஈடான தமிழ்த் தலைவர் எவருமில்லை," என்றார் திரு நடராசன்.
அச்சுக்கோக்கும் பணி பற்றி..
அந்தக் காலத்தில் அச்சுக்கோப்பு என்பது கடுமையான வேலை. நின்றபடியே பல மணி நேரம் வேலை செய்யவேண்டும். இந்த வேலையை சிங்கப்பூரில் உள்ளவர்கள் செய்யத் தயங்கியதால் இந்தியாவிலிருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டனர்.
அச்சுக்கோப்பு கடினமான வேலை என்றால் அதைவிட கடினமானது, பக்கங்களை அமைப்பது. சின்ன சின்ன எழுத்துகள் கொட்டி விட்டால் மீண்டும் அவற்றைக் கொத்து செய்தியாக்குவது எளிதான செயலல்ல. பக்கங்களில் தலைப்பு, செய்தி, படம் போன்றவற்றைத் தகுந்த இடங்களில் பொருத்தும் பணியை மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும்.
'லெகோ' துண்டுகளை அடுக்குவதுபோல சின்னஞ்சிறிய எழுத்துகளை அடுக்கிச் செய்யும் அந்தப் பக்கங்களை, கணினியில் வடிவமைப்பது போல் விரும்பியபடி மாற்ற முடியாது. அளந்து அளந்து செய்ய வேண்டும். அதனால் முதல் முறையே மிகச் சரியாக செய்து விட வேண்டும். செய்யும் வேலையின் அளவைப் பொறுத்துதான் அப்போது சம்பளம் கொடுப்பாளர்கள். அதாவது, எவ்வளவு அச்சுக்கோத்தோமோ அதை அளந்து, ஒரு பத்தி, ஓர் அங்குலத்திற்கு 10 காசு என்று சம்பளம் கொடுப்பார்கள்.
அச்சுக்கோப்பாளர்களின் கைகளில் படியும் மையை மண்ணெண்ணெய் போட்டுத் துடைத்தால்தான் போகும். தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியர் திரு வை. திருநாவுக்கரசு மேற்கொண்ட முயற்சியால் அச்சுக்கோப்பு முறையில் இருந்து தமிழ் முரசு கணினிமயமானது. புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைப்பு, தரம் எல்லாமே மேம்பட்டது. பக்கங்கள் வண்ணமயமாகின.
நல்ல நண்பர்..
திரு நடராசன் பழகுவதற்கு இனிமையான மனிதர் என்று அவருடன் வேலை செய்த பல்லாண்டு கால நண்பரான அச்சுக்கோப்பாளர் திரு அருள்ராஜு செபெஸ்டியன், 73, கூறினார்.
"1968ல் நான் வேலையில் சேர்ந்தேன். தொடக்கத்தில் இருந்தே அவருடன் எனக்குப் பழக்கம். எங்கள் நட்பு 50 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வோம்," என்றார் திரு அருள்ராஜு.
திரு நடராசன் வேலையிடத்தில் அமைதியானவராக இருந்தாலும் அன்பாகப் பேசி, அறிவுரைகளும் கூறுவதாக தமிழ் முரசில் துணை ஆசிரியராகப் பணியாற்றும் நரேந்திரன் நாராயணசாமி தெரிவித்தார்.
1963ல் சம்பள உயர்வு வேண்டி தமிழ் முரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது பத்திரிகை தற்காலிகமாக மூடப்பட்டது. அப்போதைய துணை ஆசிரியர்
செல்வகணபதி, டாக்டர் ராமசாமி என்பவரின் ஆதரவுடன் தமிழ் மலர் பத்திரிகையை ஆரம்பித்தார். அப்போது அச்சுக்கோப்பாளர்கள் உட்பட முரசின் ஊழியர்கள் பலரும் அங்கு சேர்ந்தனர். அந்த வாய்ப்பு கிடைத்தபோதும் நடராசன் அதனை ஏற்க விரும்பவில்லை.
"டைம்ஸ் பத்திரிகையில் செல்வகணபதி வெளியிட்டிருந்த விளம்பரத்தின் வழியாகத்தான் அதைப் பற்றித் தெரிந்துகொண்டோம். அவரின் செயல் எனக்குப் பிடிக்கவில்லை. அவரது செயலால் சாரங்கபாணியும் வருத்தமடைந்தார். ஆயினும், இறுதியில் தமிழவேள் மீண்டும் இப்பத்திரிகையைத் தொடங்கினார்," என்று கூறினார்.
திரு சாரங்கபாணிக்குப் பிறகு தமிழ் முரசு பத்திரிகையை நடத்தி வந்த அவர் மகன்களின் நிர்வாகத்தால் அதன் நிதிநிலைமை வலுவிழந்ததாகக் குறிப்பிட்ட திரு நடராசன், அப்போது ஊதியம் வருவதற்குத் தாமதமாகும் என்றார்.
ஆயினும், தமது வேலை மீதான நேசத்தால் பணத்தைப் பெரிதுபடுத்தாமல் தொடர்ந்து உழைத்தார். தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் இன்று செய்தித்தாள் பார்ப்பதற்குக் கவர்ச்சியாக இருந்தாலும் ஆர்வத்துடன் பத்திரிகையை நாடும் வாசகர்கள் குறைந்து வருவது இவரை வருந்த வைக்கிறது.
செய்தித்தாள் படிக்கும், தமிழில் வாசிக்கும் கலாசாரம் காலப்போக்கில் குறைந்து வருகிறது என்ற இவர், வாசிப்புப் பழக்கம் தொடர்ந்து இளையர்களிடையே ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றார்.
22 வயதில் மணம் புரிந்த திரு நடராசனுக்கு, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஏறக்குறைய 68 ஆண்டுகள் சிங்கப்பூரில் வாழ்ந்த திரு நடராசன், அண்மையில் தமிழகம் திரும்பினார். நீண்ட காலம் வாழ்ந்த மண்ணைவிட்டுப் பிரிவது வருத்தமாக இருந்தாலும், வயதான காலத்தில் மகளுடன், பிறந்த மண்ணில் வாழ விரும்பி இந்த முடிவை எடுத்துள்ளார்.
"எங்கு போனாலும் தமிழ் முரசைப் பிரிய முடியாது என்பதால், தொடர்ந்து திருத்தாளராக வேலைபார்ப்பேன்," என்றார் தமிழ் முரசின் நான்கு தலைமுறை ஊழியர்களுக்கு ஊக்கசக்தியாகத் திகழும் மூத்த ஊழியர் திரு நடராசன்.