ஜனார்த்தனன் கிருஷ்ணசாமி
கலைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் சமூகத்தின் ஒட்டுமொத்த மன அமைதிக்குப் பங்களிப்பதாக தேசிய கலைகள் மன்றத்தின் 'கலைகளின் நண்பர்' விருதைப் பெற்ற ஷபீர் ஹசான்பாய், 71, கூறுகிறார்.
நன்கொடை அளிப்பதிலும் நன்கொடை திரட்டுவதிலும் பல்லாண்டுகளாக மும்முரமாகச் செயல்பட்டு வருகிறார் திரு ஷபீர்.
"நானும் என் பங்காளிகளும் எடுத்துள்ள முயற்சிகளால் இதுவரை 20 கலைத்துறை மாணவர்களுக்கு நிதியுதவி அளித்திருக்கிறோம்," என்று அவர் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
திரு ஷபீர் உட்பட கலைப் புரவலர்களாகவும் கலைகளின் நண்பர்களாகவும் உள்ள 264 கொடையாளிகளுக்கு அண்மையில் விருதுகள் வழங்கப்பட்டன. இவர்கள் கடந்தாண்டு 40 மில்லியன் வெள்ளியை கலை அமைப்புகளுக்கும் கலைஞர்களுக்கும் கொடையாக வழங்கினர்.
இவர்களை அங்கீகரிக்கும் மெய்நிகர் விருது நிகழ்ச்சி செப்டம்பர் 17ஆம் தேதி சிங்கப்பூர் சீன கலசார நிலையத்தில் நடந்தது. இதில் கலாசார சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
விருது குறித்து பெருமை அடைவதாகக் கூறிய திரு ஷபீர், நிதியை சரியாக, செயல்திறன்மிக்க முறையில் பயன்படுத்தும் பொறுப்பு ஒவ்வொரு புரவலருக்கும் உள்ளது என்றும் தெரிவித்தார்.
தம்மைப் போல கலை அமைப்புகளை ஆதரிக்க விரும்புவோர், எத்தகையை அளவில் நிதி வழங்கினாலும் கலை அமைப்பைச் சரியாக புரிந்துகொண்டு தருவது சிறந்தது எனத் தெரிவித்தார்.
"உள்ளூர் கலைஞர்களுக்கு ஊக்கம் தருவதும் அவர்களைப் பொருத்தமான உதவி அமைப்புகளுடன் இணைப்பதும் முக்கியம்," என்றும் பகிர்ந்துகொண்டார் திரு ஷபீர்.
தனிநபர்கள் சில நேரங்களில் தவறு செய்தாலும் சமூக நலனைக் கருதி அறப் பணிகளைப் புரவலர்கள் கைவிடக்கூடாது என்று கூறிய திரு ஷபீர், சிங்கப்பூரைப் பொறுத்தவரை பத்தில் 9 அமைப்புகள் நம்பிக்கைக்குரியவை என்றார்.
திரு ஷபீர், உலோக மறுபயனீட்டு குடும்ப வர்த்தகமான இன்டோ ஸ்ட்ரெய்ட்ஸ் டிரேடிங் நிறுவனத்தில் 50 ஆண்டுகளாக நிர்வாகியாகப் பணியாற்றியுள்ளார்.
சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையின் துணைத் தலைவர், சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அறங்காவலர் அவை உறுப்பினர் என பல சமூகப் பொறுப்புகளையும் அவர் வகிக்கிறார். கலைகளின் பக்கம் தமது கவனம் திரும்பியதற்கான காரணத்தைத் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
"என் மனைவி சிறந்த பாடகரும் இசைப் பிரியரும் ஆவார். மகள் பியானோ வாசிப்பார். என் பேரப்பிள்ளைகள் பியானோ, சாக்ஸஃபோன் ஆகிய கருவிகளை வாசிப்பார்கள். எனக்கு இசைத்திறமை இல்லாவிட்டாலும் நான் அனைத்து வகை இசையையும் கேட்டு மகிழ்வேன்," என்று கூறினார் திரு ஷபீர்.
கலைகள் நமக்குத் தேவை என்றும் அவற்றை ஆதரிப்பது அவசியம் என்றும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்து வது முக்கியம் என்று திரு ஷபீர் வலியுறுத்தினார். கலாசாரம், இன நல்லிணக்கம் போன்ற சமூக பண்புநலன்கள் வளர்க்கப்பட்டால் அதனால் கலை ரசிகர்களும் பெருகுவார்கள்," என்று அவர் கூறினார்.