இந்து இளங்கோவன்
பெயர் குறிப்பிட விரும்பாத அந்த மூதாட்டிக்கு 69 வயது. கொவிட்-19 எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை. நீரிழிவு நோயாளி என்பதால் தடுப்பூசியைத் தம் உடலுக்குள் செலுத்தினால் உடல் நலம் மேலும் பாதிக்கப்படும் என்ற பயம் அவருக்கு.
தெரிந்தவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் காய்ச்சல், உடம்பு வலி போன்ற பக்கவிளைவுகளால் தவித்ததைக் கண்ட மூதாட்டி, தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளத் தயங்கினார்.
இருப்பினும், பிள்ளைகளின் வற்புறுத்தலால் இவ்வாண்டு ஜூலை மாதம் தனது முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். இப்போது கூடுதல் தடுப்பூசி (பூஸ்டர்) போட்டுக்கொள்ள மறுக்கிறார்.
"நான் அதிகம் வெளியே செல்வதில்லை. பெரும்பாலும் வீட்டிலேயேதான் இருக்கிறேன். என் குடியிருப்பு வட்டாரத்தில் அதிகம் கிருமித்தொற்று பரவவில்லை.
"உடலில் எத்தகைய மாற்றத்தை விளைவிக்குமோ என்று தெரியாமல் எப்படி இந்தத் தடுப்பூசியை மீண்டும் மீண்டும் போட்டுக்கொள்வது? தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கும் இப்போது கிருமித்தொற்றுகிறது," என்று தம் கருத்தைப் பகிர்ந்துகொண்டார் அந்த மூதாட்டி.
இவரைப் போலவே சில முதியவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்னமும் தயங்குகின்றனர்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதால் தங்களையும் தங்களைச் சுற்றி இருப்பவரையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனத் தடுப்பூசி போட்டுக்கொள்வதை முதியவர்களிடையே சுகாதார அமைச்சு ஊக்குவித்து வருகிறது.
அண்மைய கொவிட்-19 நிலவரம்
கடந்த 28 நாட்களில் மட்டும் கொவிட்-19 கிருமித்தொற்றால் இறந்தவர்களில், இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள் 26.6 விழுக்காட்டினர். மீதம் 73.4 விழுக்காட்டினரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத, அல்லது முதல் தடுப்பூசியை மட்டும் போட்டுக்கொண்டவர்கள் ஆவர்.
கடந்த இரு வாரங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோரிடையே பதிவான புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள், பெரும்பாலும் 500க்கு மேலாக இருந்தன. நேற்று முன்தின நிலவரப்படி, கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் உயிரிழந்த 215 பேரில், 60 வயதுக்கு மேற்பட்டோர் 205.
'டெல்டா'வுக்கு எதிரான பாதுகாப்பு
முதியவர்களிடையே கிருமிப் பரவலைத் தடுத்து தொற்றுச் சம்பவங்களைக் குறைத்திட தடுப்பூசி கைகொடுக்கிறது.
அத்துடன் உலகெங்கும் அதிகமாகப் பரவிவரும் டெல்டா உருமாறிய கிருமியை அண்டவிடாமல் தடுக்கவும் தடுப்பூசி உதவும் என்று பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று காட்டுகிறது. கடந்த திங்கட்கிழமையன்று இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கிருமித்தொற்றால் ஏற்படக்கூடிய கடுமையான பாதிப்புகள், உயிரிழப்புகள் ஆகியவற்றை மையப்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 50 வயதுக்கும் மேற்பட்ட 22 மில்லியன் மக்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களைக் காட்டிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் 90% குறைவு என்று கண்டறியப்பட்டது.
பயமின்றி வெளியே நடமாடலாம்
அஞ்சல் துறையில் வேலை செய்து ஓய்வு பெற்றுவிட்ட 71 வயது சோமசுந்தரம் இராமலிங்கம், ஏப்ரல் மாதமே தனது இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று பூஸ்டர் தடுப்பூசியையும் போட்டுக்கொண்ட இவர், தடுப்பூசி போட்டுக்கொண்டதால் ஓரளவு பயம் இல்லாமல் தம்மால் வெளியே சென்றுவர முடிகிறது என்றார்.
பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதன் மூலம் ஒரு வகையில் தமது ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வேலையில் பாதுகாப்பு
தினமும் பலரது வீட்டிற்கு 62 வயது செய்தித்தாள் விநியோகிப்பாளர் திரு இளங்கோவன் செய்தித்தாட்களை விநியோகம் செய்கிறார். இப்படிப் பல இடங்களுக்குச் சென்று பலருடன் உரையாட வேண்டிய கட்டாயம் இருப்பதால் ஏப்ரல் மாதத்திலேயே தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டார். இப்போது பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்.
தடுப்பூசி போட்டுக்கொள்வது
ஒரு முன்னெச்சரிக்கையே
பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் 'எல்லாவிதமான பிரச்சினைகளும்' தங்களுக்கு ஏற்பட்டதைத் தம்மிடம் நண்பர்கள் கூறியதாக ஓய்வுபெற்ற பராமரிப்பு அதிகாரி 68 வயது ஜஸ்வந்த் சிங் கூறினார்.
"எனக்கு முதல் இரண்டு தடுப்பூசிகள் போதும். ஒரு வித்தியாசமும் இந்த பூஸ்டர் தடுப்பூசியில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தடுப்பூசி என்பது முன்னெச்சரிக்கை என்று அரசாங்கம் கூறியதால் முதல் இரண்டை நான் போட்டுக்கொண்டேன்," என்றார் திரு சிங்.
நமது உயிர் மட்டுமின்றி
பிறர் உயிருக்கும் உத்தரவாதம்
மருத்துவமனை ஒன்றில் நோயாளி சேவைப் பிரிவில் 63 வயது திருமதி ம. அன்பழகி மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். மருத்துவப் படுக்கைப் பிரிவுகளில் தங்கியிருக்கும் நோயாளிகளைப் பார்ப்பதற்காக வரும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் போன்றோரிடமிருந்து விவரத்தைக் கேட்டு அறிந்துகொள்வது, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது போன்ற பொறுப்புகள் திருமதி அன்பழகிக்கு உண்டு. ஒரே நாளில் கிட்டத்தட்ட 50 பேரைச் சந்திக்க நேரிடலாம் என்ற நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதே சிறந்த முடிவு என்றார் அவர். மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்வதைச் சுகாதாரப் பராமரிப்புத் துறை பணியாளர்களிடையே அரசாங்கம் பெரிதும் வலியுறுத்தி வருகிறது.
தம்முடைய இரு இளம் பேரன்களுடன் அடிக்கடி நேரத்தைச் செலவழிப்பதால் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கவல்லது தடுப்பூசி என்பது திருமதி அன்பழகியின் நம்பிக்கை.
"என் பேரன்கள் இருவருக்கும் 5 மற்றும் 7 வயதுதான். இந்த வயதுப் பிரிவினருக்கு அரசாங்கம் இன்னும் கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில், எளிதில் பாதிப்படையும் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். நானும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்தால் என் பேரப்பிள்ளைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாமல் போய்விடும்," என்றார் அவர்.
பூஸ்டர் தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து திருமதி அன்பழகி தம்முடைய 65 வயது கணவருடன் சென்று தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.
"பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டபோது முதல் இரண்டு தடுப்பூசிகளைக் காட்டிலும் வலி சற்று கூடுதலாக இருந்தது. மிதமான காய்ச்சலும் வந்தது. ஆனால் பின்னாளில் பெரும் பாதிப்பு ஏற்படுவதை இந்த தடுப்பூசி தடுக்கும் என்ற எண்ணம் எனக்கு ஆறுதல் அளிக்கிறது," என்றார் திருமதி அன்பழகி.
கூடுதல் செய்தி: சி.சுபாஷினி