ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தனியாகக் குடிகொண்டு இருக்கும் பெரியாச்சி சன்னிதியில் அரவானின் களப்பலி நிகழ்வு பெரிய அளவில் நடைபெறும். சூரிய சந்திரரை எதிரெதிரே சந்திக்க வைத்து, கிருஷ்ணர் ஏற்படுத்திய அமாவாசை திதியன்று அர்ச்சுனனின் மகன் அரவானைப் பலி தரும் நிகழ்வைக் குறிக்கும் சடங்கு இது.
தொண்டூழியர்கள் பி. வீரமணி, 51, திரௌபதையாகவும் பவன் பிரகாஷ், 34, கிருஷ்ணராகவும் வேடமிடுகின்றனர். இதற்காக 48 நாள் விரதமிருக்க வேண்டியிருந்ததாக இருவரும் தெரிவித்தனர்.
எட்டு ஆண்டுகளாகத் தீமிதித் திருவிழாவில் திரௌபதையாக நடிக்கும் திரு வீரமணி, இது நடிப்பு என்பதையும் தாண்டி இறைசக்தி தம்மை நிரப்பும் அனுபவம் எனப் பகிர்ந்தார். கிருஷ்ணராக நடிக்கும் திரு பவன், தாம் இதற்குத் தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைந்தாலும், வசனங்களைச் சரியாகச் சொல்லி, கதாபாத்திரத்தின் மேன்மையைக் கட்டிக்காக்கவேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்ததாகக் கூறினார்.
அபிமன்யூ வதமும் படுகளமும்
தீமிதிக்கு முதல் நாள் அன்று காலையில் அபிமன்யு வதம் நடைபெறும். சக்கர வியூகத்துக்குள் சிக்கி உயிரிழக்கும் அபிமன்யுவின் கதை நாடகமாக நடிக்கப்படும். அர்ஜுனராக நடிப்பவரே அபிமன்யூவாகவும் நடிப்பார்.
அதற்கு அடுத்து, தீமிதி நாளன்று இடம்பெறும் முக்கிய நிகழ்வு படு களம். அதிகாலை நான்கு மணி முதல் இந்தச் சடங்கிற்கான பணிகள் தயாராகி விடும். அபிமன்யூ, துரோணர், கர்ணன், துரியோதனன், துச்சாதனன் ஆகியோரைக் குறிக்கும் மண் உருவங்கள் அமைக்கப்பட்டு, அவர்களை வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும். இவர்களில் முதல் மூவருக்குச் சொர்க்கம், மற்ற இருவருக்கும் நரகம் என்பாள் பாஞ்சாலி. துரியோதனனின் தொடை பிளக்கப்பட்டு, ரத்தத்தை தடவி கூந்தலை அள்ளி முடிப்பார் திரௌபதை. அப்போது ஆலயத்திலுள்ள நான்கு திரௌபதை சிலைகளுக்கும் வண்ண உடைகளும் நகைகளும் அணிவிக்கப்பட்டு, அலங்காரத்துடன் காட்சி தருவர்.
இந்த நாடகங்களில் கதைமாந்தர்களின் வசனம் காலங்காலமாக அப்படியே உள்ளன. எனினும் வேடமேற்போருக்கு உரிய பயிற்சி தந்து வழிநடத்தும் பொறுப்பு, கோயிலின் மூத்த தொண்டூழியர் வீ. பழனிச்சாமியைச் சேர்ந்ததாகும்.
“18 ஆண்டுகளாக மகாபாரதக் கதை விளக்கத்தைச் சடங்குகளின்போது கூறும் நான், நடிகர்களுக்குப் பக்கபலமாகவும் இருக்கிறேன். வசனங்களை அவர்கள் மறந்தால் அவற்றை நினைவுபடுத்துவேன்,” என்றார் திரு பழனிச்சாமி.
பூக்குழி அமைத்தல்
எட்டு அடி அகலமும் 18 அடி நீளமும் கொண்டுள்ள பூக்குழி, கோயில் வளாகத்திற்குள்ளேயே அமைக்கப் படும். இதில் தணல் ஏற்படுத்த சந்தனக் கட்டைகள் எரிக்கப்படும். பூக்குழி மூட்டும் பணியில் இவ்வாண்டு 45 தொண்டூழியர்கள் ஈடுபடுவர். இவ்வாண்டு 20,000 மரக்கட்டைகள் மலேசியாவிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளன. இதில் 15,000 மரக்கட்டைகள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டைகள் எரிந்து தணலாக 6 முதல் 8 மணி நேரம் வரை ஆகும்.
பூக்குழிக்குப் பக்கத்தில் பால் ஊற்றுவதற்கான சிறு குழி ஒன்றும் அமைக்கப்படும். கடந்த ஆண்டு 60 பேர் மட்டும் பூக்குழி இறங்கினர். இவ்வாண்டு 950 பேர் பூக்குழி இறங்க பதிவு செய்துள்ளனர்.
வெள்ளி ரத ஊர்வலம்
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான ஸ்ரீ மாரியம்மனின் வெள்ளி ரதப் புறப்பாடு இவ்வாண்டு இடம்பெறும். கொவிட்-19 காரணமாக ரதம் நிற்கும் இடங்கள் பெரிதும் குறைக்கப்பட்டுள்ளன.
கிருமிப் பரவலுக்கு முந்திய காலகட்டத்தில் ஒரு நாளுக்கு ஐந்து இடங்கள் வரையிலும் நிற்கும் மாரியம்மனின் தேர், இப்போது நாளுக்கு ஒரே ஒரு இடத்தில்தான் நிற்கும்.
தீமிதி அன்று, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து பாத ஊர்வலமாகப் புறப்படும் பக்தர்கள், ஐந்து கிலோமீட்டர் நடந்து ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தை அடைய வேண்டும். கொவிட்-19 பரவல் சூழலால் கடந்த ஆண்டு ஆலயத்தின் தொண்டூழியர்களுக்குள்ளே விழா நடத்தப்பட்டது. இந்த முறை ஆலயத்திற்கு அருகிலுள்ள பகோடா ஸ்திரீட்டில் பக்தர்கள் பதிவு செய்து 20 மீட்டர் தொலைவு நடப்பார்கள்.
பக்தர்களின் இறையுணர்வு
பதினாறு ஆண்டுகளாக தீமிதியில் கலந்துகொண்டு வரும் திரு சி. காளிதாசன், 37, “கட்டுப்பாடு களால் நானும் என் சகோதரர்களும் நண்பர்களும் ஒரே நேரத்தில் பூக்குழி இவ்வாண்டு பதிவுசெய்ய இயலவில்லை. ஆனாலும், வேண்டுதல் இன்றி இதனைச் செய்யும் எனக்கு இந்த வாய்ப்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்கிறேன்,” என்றார்.
பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தீமிதியில் கலந்துகொள்ளும் திரு திலீப் குமார், 35, கிருமிப்பரவலால் தமது சுற்றுலாத்துறை வேலையும் சுயதொழிலும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
“தற்போதைய நிலை மேலும் தொடர்ந்தால் பெரிய இன்னல்கள் ஏற்படலாம். என் வேண்டுதலுக்கு அம்மன் செவிமடுப்பாள் என நம்புகிறேன்,” என்றார் திரு திலீப்.
இவ்வாண்டு அங்கபிரதட்சணம் செய்த தனியார் வாகன ஓட்டுநர் விக்னேஷ் மணிமாறன், 31, இம்முறை கூட்ட நெரிசல் இல்லாததால் தம் சகோதரர்களுடன் சேர்ந்து மனநிறைவுடன் வேண்டுதலை நிறைவேற்றியதாகக் கூறினார்.
1970களில் தமது 50வது வயதில் நோய்வாய்ப்பட்ட மனைவிக்காக பூக்குழி இறங்கத் தொடங்கிய திரு ராமச்சந்திரன், 92, தற்போது ஸ்ரீ நாராயண மிஷன் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வசிக்கிறார். ஆயினும், தாம் இன்னமும் தம் மகன் களுடன் பூக்குழி இறங்க விரும்புவதாக அவர் சொன்னார்.
“முதல் முறை பூக்குழி இறங்கியபோது பயந்துபோன நான், இனி அதைச் செய்யக்கூடாது என முடிவெடுத்தேன். அப்போது எனக்கு ஏற்பட்ட கனவு ஒன்று என் மனத்தை மாற்றியது. அன்று முதல் 30 ஆண்டு களாகப் பூக்குழி இறங்கினேன்,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
அயராது அருந்தொண்டு
இவ்விழா சிறப்பாக நடைபெற 150 பேர் இரவு பகலாக உழைக்கின்றனர். கடைசி நாள்களில் சிலர் கோயிலிலேயே தங்கிவிடுவது என்பது வழக்கமாக இருந்தாலும் இவ்வாண்டு கிருமிப் பரவல் காரணமாக யாரும் ஆலயத்திற்குள் தங்கவில்லை. கிருமிப்பரவலுக்கு முந்திய காலகட்டத்தில் 500 தொண்டூழியர்கள் ஒன்றிணைவர். ஆடி மாதத் திங்கட்கிழமையன்று தொடங்கும் தீமிதித் திருவிழா தொடர்பான சடங்குகள், ஐப்பசி மாதத் திங்கட்கிழமையன்று நிறைவுறும். இவ்வாண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா, அக்டோபர் 27ஆம் தேதியன்று மகாபாரதத்தின் இறுதி அத்தியாயம் படிக்கப்பட்டு, மறுநாள் மஞ்சள் நீராட்டு சடங்குடன் ஆஞ்சநேயர் கொடி இறக்கத்துடன் நிறைவுபெறும்.
“ஐந்தாண்டுகளாக தொடர்ந்து நான் பூக்குழி இறங்குகிறேன். முதலில் என் அப்பா இறங்கினார். இப்போது நான். என் மகனும் இறங்குவான் என்று நினைக்கிறேன். வேண்டுதல் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இது நம் சிங்கப்பூர் மக்களுக்கு முக்கியமான சடங்கு. நமது பாரம்பரியம். நாம்தான் இதைக் கட்டிக்காக்க வேண்டும்,” என்று கூறிய திரு இலங்கேஸ்வரன், 32, இந்த ஆண்டு தீமிதிக்க வாய்ப்பு கிடைத்ததை அந்த மாரியம்மனின் அருளாகவே நினைக்கிறார்.
கொவிட்-19 கட்டுப்பாடுகளால் முன்னதாக பதிவுசெய்யாமல் நேரில் வரும் பக்தர்கள், பார்வையாளர்கள் அல்லது ஆதரவாளர்களுக்கு கோயிலுக்குள் அனுமதி இல்லை.
எனினும் தீமிதித் திருவிழா நிகழ்வுகளை இந்து அறக்கட்டளை வாரியத்தின் யூடியூப் அல்லது ஃபேஸ்புக் தளத்தில் காணலாம்:
https://www.youtube.com/hindu endowmentsboard
https://www.facebook.com/hindu endowmentsboard