ப. பாலசுப்பிரமணியம்
பல்கலைக்கழக ஓட்டப்பந்தய வீரர்களுக்கு பயிற்சி அளித்துவிட்டு, 55 வயது திரு சி.பாண்டியன் உணவங்காடி நிலையத்தில் சக பயிற்றுவிப்பாளரான நண்பர் திரு ச.மாறனுடன் உணவு அருந்திக்கொண்டிருந்தார். அப்போது திரு பாண்டியனுக்குத் திடீரென்று விக்கல் வந்தது.
பிறகு, உடலின் வலது பக்கம் பலவீன மாகிப்போனது போன்ற உணர்வு. பேசவும் சிரமப்பட்டார்.
உயிர்க்காப்பு பயிற்சிகளுக்குச் சென்றிருக்கும் மாறன், திரு பாண்டியனுக்கு பக்கவாதம் தாக்கியிருப்பதை உணர்ந்தார்.
யோசிப்பதற்கு நேரம் இல்லை.
தமது வாகனம்வரை திரு பாண்டியனைச் சுமந்துசென்று, சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அவரை விரைந்து அழைத்துச் சென்றார் திரு மாறன்.
அங்கு செல்லும்வரை, திரு பாண்டியன் சுயநினைவை இழந்துவிடாமல் இருக்க, அவரிடம் உரையாடிக்கொண்டே வாகனத்தை ஓட்டினார் மாறன்.
"காலம் கடந்து திரு பாண்டியன் அனு மதிக்கப்பட்டிருந்தால், உடல் முடமாகிப் போகும் நிலைக்கு இவர் ஆளாயிருக்கக்கூடும் என்று மருத்துவர் தெரிவித்தார்.
"பக்கவாத அறிகுறியை கண்டதும் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்பதை இது நினைவுபடுத்துகிறது," என்று கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடந்த இச்சம்பவத்தை நினைவுகூர்ந்தார் திரு மாறன், 53.
திரு பாண்டியனின் உடலின் வலது பக்கம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால், தலை முதல் கால்வரை அவரது அசைவு கள் பாதிக்கப்பட்டன.
முதல் ஒன்பது நாட்களுக்கு, திரு பாண்டியனின் உடல்நலம் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டது. அதன்பிறகு ஊட்ரம் சமூக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு ஆறு வாரங்கள் சிகிச்சை பெற்றார்.
குணமடைய நீண்ட பயணம்
தமக்கு என்ன நடக்கிறது என்ற குழப்பமும் விரக்தியும் வந்தபோது, உளவியல் நிபுணரான திரு பாண்டியனின் மூத்த மகள் பிரிதிஸ்வரி, 25, அவருக்குப் பக்க பலமாக இருந்தார்.
பேச்சுப் பயிற்சி, தினசரி நடவடிக்கைளை மேற்கொள்வதற்கான தொழில் சிகிச்சை (occupational therapy), உடற் பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டுவர அவரது உடல்நலனில் சற்று முன்னேற்றம் தெரிந்தது.
விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருக்கு எப்படி பக்கவாதம் வந்திருக்கும் என்று சுற்றியிருந்தவர்கள் எண்ணினர். திரு பாண்டியனின் வாழ்க்கைமுறைதான் இதற்குக் காரணம்.
கைபேசியில் திரைப்படம் பார்த்தவாறு நீண்ட நேரம் முடங்கி இருப்பது, அதிகாலை 2 மணிக்கு தூங்கி போதிய உறக்கம் இல்லாமல் போவது, இரவில் அடிக்கடி உணவங்காடிக் கடையில் ஆரோக்கியமற்ற 'சப்பர்' உணவுக்குப் போவது, நேரத்துடன் சாப்பிடாதது, அளவுக்கு மீறி சாப்பிடுவது என்று நலமற்ற வாழ்க்கைமுறையை இவர் கடைப்பிடித்து வந்தார்.
மன உறுதியுடன் மீண்டுவந்தார்
மருத்துவமனையிலிருந்து திரு பாண்டியன் வீடு திரும்பியதும், ஊன்றுகோல் உதவியுடன் மெல்ல மெல்ல நடந்தார்.
எழுந்து நிலையாக நிற்பதே இவருக்கு பெரும் சவால். ஆனால் இதுதான் கதி என்று அவர் சோர்ந்துவிடவில்லை.
அசைவதே சவாலாக இருந்தபோது தினமும் காலையில் ஒரு மணி நேரமாவது தம் வீடமைப்புப் பேட்டை அருகே அவர் நடக்கச் சென்றுவிடுவார். சுமார் 250 மீட்டர் தூரத்தை கடக்க, இவருக்கு 20 நிமிடங்கள் பிடிக்கும்.கால் முட்டிப் பகுதி வீக்கம் அடையும்போதெல்லாம் ஒத்தடம் கொடுத்து வீக்கத்தை போக்கிடுவார்.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட 7 மாதங்களாக 'S3' எனும் பக்கவாத ஆதரவு நிலையம், இவருக்கு அதிநவீன 'டிரெட்மில்' உடற்பயிற்சியை வழங்கி கால் தசைகள் மேம்பட வழிவகுத்தது.
வீட்டில் குணமடைந்து வந்த திரு பாண்டியனுக்கு, தாய் ஹுவா குவான் அறக்கட்டளை அமைப்பு மூன்று வேளை உணவையும் அனுப்பி வைத்தது. மருத்துவப் பரிசோதனைகளுக்கு இவரை மருத்துவ வாகனத்தில் அழைத்துச் செல்லவும் அமைப்பு உதவியது.
வாரத்தில் மூன்று முறை, இரண்டு மணி நேர உடல் ஆற்றல் செயல்பாட்டுப் (psychomotor) பயிற்சிக்கு திரு பாண்டியனை உட்படுத்தினார் அவரது அன்பான நண்பர் திரு மாறன்.
தம்மைச் சுற்றியிருக்கும் பயிற்றுவிப்பாளர்கள், இரண்டாவது மகள் 24 வயது ஹர்ஷினி உட்பட குடும்பம், நண்பர் வட்டத்தின் ஆதரவுடன், திரு பாண்டியனின் உடல்நலம் துரிதமாக மேம்பட்டது.
உடல்நிலையில் சிறப்பான முன்னேற்றம்
கடந்த ஜூலை மாதம் முதல் திரு பாண்டியன் ஊன்றுகோல் இன்றி நடக்கிறார்.
நான்கு நிமிடங்களில் 250 மீட்டர் தூரத்தை கடந்து வரும் நிலைக்கு அவர் முன்னேறியுள்ளார்.
"உள்ளூரில் 800 மீட்டர் தூர ஓட்டப் பந்தயத்தை சாதனை நேரத்தில் வென்றவன் நீ, உன்னால் இதைக் கடந்து வர முடியும் என்று நம்பிக்கை அளித்தேன், ஒரு மாதத்தில் நடக்கத் தொடங்கிவிடுவாய் என்றேன். எனினும் அவர் முன்னேற்றத்துக்கு அவரது மனத்திடமே முக்கிய காரணம்," என்று விளக்கினார் திரு மாறன்.
"பக்கவாதம் ஏற்பட்டவர்கள் பலர் சமுதாயத்தை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம் என அஞ்சி வீட்டில் முடங்கி இருக்கின்றனர். இதிலிருந்து மீண்டு வருவோம் என்பதைச் சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடல்நலத்தின் முன்னேற்றத்துக்கான ஒவ்வொரு இலக்கை அடையும்போது அடுத்த இலக்கைப் பற்றி யோசித்து அதனை நோக்கி செயல்பட வேண்டும்," என்று கூறினார் ஓராண்டுகாலக் கடின உழைப்பில் துரித முன்னேற்றத்தை அடைந்த திரு பாண்டியன்.
இவ்வாண்டு முதற்பாதியில் வேலைக்குத் திரும்பிய திரு பாண்டியன், இன்று நேரத்துடன் தூங்குகிறார். ஆரோக்கிய உணவை நேரத்துடன் சாப்பிடுகிறார். தினமும் நான்கு மணி நேரம் உடலசைவுகளை மேம்படுத்தும் பயிற்சிகளுக்காக ஒதுக்குகிறார்.
வீட்டு வேலைகளை இயல்பாக அவர் செய்ய முடிவது அவர் உடல்நிலை தேரி வருவதைக் குறிக்கிறது.
மீண்டும் ஓடவேண்டும் என்ற அடுத்த இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் முயன்று வருகிறார் செயல் வீரர் பாண்டியன்.