மைசூர் விலங்கியல் தோட்டத்திலிருந்து மண்டாயில் உள்ள சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்துக்கு இவ்வாண்டு இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளைக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றியவர் மாண்டாய் வனவிலங்குக் குழுமத்தில் தாவரவகைகளை உண்டு வாழும் விலங்குகளுக்கான காப்பாளராகப் பணியாற்றும் திரு பரமசிவம் ராமசாமி.
பாலாஜி, அடில் இரண்டுடனும் பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு அவற்றுடன் பயணிக்க திரு பரமசிவம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் சக பணியாளரான ஜமாலுதீன் வாஹிட்டும் தேர்வானார்.
கடந்த 28 ஆண்டுகளாக பல்வேறு கால்நடைகளுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட பரமசிவம், ஒட்டகச்சிவங்கிகள் ஒரு வயதாக இருக்கும்போது அவற்றை முதன்முதலில் சந்தித்தார். அதனால் ஒட்டகச்சிவிங்கிகள் இவரிடம் எளிதில் ஒட்டிக்கொண்டன.
காப்பாளர்கள் ஐந்து மாதத்தில் உணவளித்து, பராமரித்து, அவற்றின் நம்பிக்கையைப் பெற்றனர்.
அத்துடன் சிங்கப்பூருக்கான பயணத்தில் விலங்குகளுக்குச் சிரமத்தைக் குறைக்க பெருமுயற்சி எடுக்கப்பட்டது. ஒட்டகச்சிவிங்கிகளின் உயரத்துக்கு ஏற்ப மடிக்கக்கூடிய மரக்கூண்டுகள் அமைக்கப்பட்டன. அவற்றில் அமைதியுடன் இருப்பதற்கு விலங்குகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
மைசூரிலிருந்து ஆந்திரப் பிரதேசத்துக்கு கிட்டத்தட்ட ஒருநாள் சாலைப் பயணம், பின்னர் ஏழு நாள் கப்பல் பயணம்.
திரு பரமசிவமும் திரு ஜமாலுதீனும் விலங்குகள், அமைதியாகவும் உடல்நலத்துடனும் இருப்பதை உறுதிசெய்துகொண்டே வந்தனர்.
மூன்று மாதத் தனிமையின்போது அடில், பாலாஜி விடப்பட்ட புதிய சூழல், பராமரிப்பாளர்கள், உணவுவகைகளுக்குப் பழகிக் கொண்டன. தற்போது ஒட்டகச்சிவிங்களுக்கான பகுதியில் அவை நலமாக இருப்பதாகக் கூறினார் திரு பரமசிவம்.
"ஒட்டகச்சிவிங்கிகளுக்குப் போதிய உணவு, நடமாட வசதியான இடம், செறிவுபெற வாய்ப்புகள் ஆகியவை கிடைப்பதை உறுதி செய்துவருகிறோம்," என்றார் அவர்.