ப. பாலசுப்பிரமணியம்
ஒருவரின் தோற்றத்தைப் பார்த்துவிட்டு அவரை எடைபோடக்கூடாது என்பது முன்னாள் பள்ளி உடற்யிற்சி ஆசிரியரான திரு அருண் ரொசியாவுக்குப் பொருந்தும்.
இவ்வாண்டின் சிங்கப்பூர் 'மேன்ஹண்ட்' கட்டழகர் போட்டியில் பங்குபெறும் ஆக மூத்த போட்டியாளர், 57 வயது திரு அருண் ஆவார்.
இவரின் கட்டுடல் இளம் ஆண்களையும் ஆச்சரியப் படுத்தும். ஆனால் இவர் எதிர்கொண்ட சவால்கள் எளிதில் வெளியில் தெரியாதவை.
உடற்பயிற்சி செய்வதை வாழ்க்கைமுறையாகக் கொண்டுள்ள திரு அருண், சில ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயை எதிர்கொண்டு மீண்டவர்.
கடந்த 2015ஆம் ஆண்டில் அவருக்கு மூன்றாம் கட்ட பெருங்குடல் புற்றுநோய் இருப்பது மருத்துவ சோதனையில் தெரியவந்தது.
இதை அடுத்து, 28 முறை கதிரியக்க, ரசாயன சிகிச்சைகளுக்கு திரு அருண் சென்றார். உடலிலும் மனத்திலும் பெரும் வேதனை ஏற்பட்ட காலகட்டம் அது என்று அவர் நினைவுகூர்ந்தார்.
ஒன்பது மாதங்களுக்கு மலப்பையைப் பயன்படுத்தினார் திரு அருண்.
வலி வரும்போதெல்லாம் துன்பத்தையும் எதிர்மறை எண்ணங்களையும் திசை திருப்ப 'புஷ்-அப்' உடற்பயிற்சி கள் இவருக்கு உதவின.
சென்ற 2016இல் 14 நாட்களில் 11,000 'புஷ்-அப்' செய்யும் சவாலில் கலந்து கொண்ட திரு அருண் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
அதே ஆண்டில் அவரது புற்றுக்கட்டியும் 20 செ.மீ. நீளமுள்ள பெருங்குடலின் ஒரு பகுதியும் அறுவை சிகிச்சை வழி அகற்றப்பட்டது.
இதற்கு மேலாக அருண் தம் மலக்குடலையும் (rectum) அகற்ற வேண்டியதாயிற்று.
அடிக்கடி கழிவறையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தைத் தவிர்க்க அவர் உணவுமுறையில் பெரிய மாற்றங்களைச் செய்யவேண்டி யிருந்தது.
காரமான உணவு, பால் பொருட்கள், பச்சைப் பூக்கோசு (ப்ரோக்கோலி), பூக்கோசு (காலிஃபிளவர்) போன்ற காய்கறிகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்து, வெள்ளை மீன் வகை, கோழியின் நெஞ்சுப்பகுதி, 'சூப்' வகைகளை இவர் உட்கொள்ளப் பழகிக்கொண்டார்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இவரது உடலில் புற்றுநோய் தென்படவில்லை.
எதிர்மறையான மனப்பான்மையைக் கொண்டிருந்தால் புற்றுநோயிலிருந்து மீண்டு வருவது பெரும் சவாலாக இருந்திருக்கும் என்று திரு அருண் விளக்கினார்.
தாம் உடல்நலம் தேறி வந்ததற்கான முக்கிய காரணம், தமது 52 வயது மனைவி திருமதி அருண் ரொசியா என்று அவர் குறிப்பிட்டார்.
திரு அருணின் மனைவி, ஆசிரியர் வேலையிலிருந்து தற்காலிகமாக அரையாண்டு காலம் விடுப்பு எடுத்து அவரைப் பார்த்துக்கொண்டார்.
மூன்று பிள்ளைகளையும் குடும்பத் தேவைகளையும் அவர் பூர்த்திசெய்தார். திரு அருணுக்கு ஏற்ற உணவுவகை களைச் சமைத்துத் தந்தார்.
நன்கு குணமடைந்து வந்துள்ளபோதும் திரு அருணுக்குச் சவால்கள் தொடர்கின்றன. சில நாட்கள் மலச்சிக்கல், சில நாட்கள் வயிற்றுப்போக்கு அல்லது புளியேப்பம். எந்நேரம் அவர் கழிவறைக்குச் செல்வார் என்பதை உறுதியாகக் கணிக்க முடியாது.
இருப்பினும், துவண்டு விடாமல் விரும்பிய முறையில் வாழ்க்கையைத் தொடர இவர் உறுதிகொண்டுள்ளார்.
இருபது ஆண்டுகள் உடற் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றிய திரு அருண், அதை விடுத்து வேறு வேலைக்கு மாறவுள்ளார்.
பெருங்குடல் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற் படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிங்கப்பூர் 'மேன்ஹண்ட்' ஆண் கட்டழகர் போட்டியில் தாம் சேர்ந்ததாகக் கூறினார் திரு அருண்.
"பெரும்பாலும் சிங்கப்பூர் ஆண்களை அதிகம் தாக்கும் புற்றுநோயாக பெருங்குடல் புற்றுநோய் உள்ளது. ஆனால் நோயின் தாக்கத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேச அதிகமானோர் முன்வருவதில்லை. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களும் ஆரோக்கிய வாழ்க்கைமுறையைத் தொடர முடியும் என்பதை உணர்த்த விரும்புகிறேன்," என்று தெரிவித்தார் திரு அருண்.
22 போட்டியாளர்கள் பங்கு பெறும் சிங்கப்பூர் 'மேன் ஹண்ட்' கட்டழகர் போட்டியின் இறுதிச்சுற்று அடுத்தாண்டு ஜனவரி மாதம் இடம்பெறும்.
மேல்விவரம் அறிய விரும்புவோர், 'manhuntsg' என்று பதிவிட்டு, சமூக வலைத் தளங்களில் விவரம் தேடலாம்.