சின்ன வயதில் அம்மா செய்யும் பொங்கலைச் சாப்பிடுவார்.
அதற்குமேல் பொங்கல் பற்றி எதையுமே நிஷா யோசிப்பதில்லை. இப்போது மகள்களுக்காக தமிழர் பண்பாடு, பாரம்பரியம் பற்றி தேடித் தேடித் தெரிந்துகொள்கிறார் இந்த 32 வயது இளம் தாய்.
"சின்ன வயதிலேயே பிள்ளைகளுக்கு விளக்கத்தோடு சொல்லிக்கொடுக்காவிட்டால் தொடர்ச்சி இல்லாமல் போய் விடும். நான் சின்ன வயதில் எதையும் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் இப்போது பிள்ளைகள் எல்லாவற்றுக்கும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கிறார்கள். 6 வயது தான்யா, 3 வயது கியாரா இருவரும் கான்வென்ட் பள்ளியில்வேறு படிக்கிறார்கள். அங்கு அவர்கள் தெரிந்துகொள்பவற்றுக்கும் வீட்டுப் பழக்கங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. அவர்களின் பண்பாட்டையும் தனித்துவத்தையும் நாம் அவர்களுக்குச் சொல்லித் தருவது இன்றைய காலகட்டத்தில் முக்கியம் என நினைக்கிறேன்," என்று நிஷா தமிழ் முரசிடம் கூறினார்.
வீட்டில் ஆங்கிலம் அதிகம் பேசினாலும், பிள்ளைகளுக்கு பொங்கலோ பொங்கலோ சொல்லிக்கொடுத்து குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடினார் நிஷா.
பொங்கல் நன்றி சொல்லும் திருநாள். விவசாயி, சூரியன் இல்லாவிட்டால் நமக்கு சோறு கிடைக்காது என்று மகள்களுக்கு புரியும் வகையில் நிஷா சொல்லித் தந்துள்ளார்.
இன்று காலை ஆறு மணிக்கெல்லாம் பொங்கல் வைத்து, சூரியனை வணங்கிவிட்டுத்தான் ஒன்றாம் வகுப்பில் படிக்கும் தான்யா பள்ளிக்குச் சென்றார்.
உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளரான 36 வயது கணவர் சண்முகமும் காலையில் விடுப்பு எடுத்திருந்தார்.
"மற்றவர்கள் பொங்கல் வைக்கிறார்கள் என்பதற்காக நான் பொங்கல் வைப்பதோ அல்லது மற்ற சடங்குகளைச் செய்வதோ இல்லை.
ஏன், எதற்கு என்பதைப் புரிந்து செய்கிறேன். பிள்ளைகளுக்கும் கணவருக்கும் சொல்லி விளக்குகிறேன்," என்றார் நிஷா.