சிங்கப்பூர்வாசிகளின் பொங்கல் விருப்பம்: 'சிரமம் போதும், மீட்சி வேண்டும்'

சிங்கப்பூர்வாசிகளின் பொங்கல் விருப்பம்: 'சிரமம் போதும், மீட்சி வேண்டும்'

2 mins read
5f43cda1-4c3b-4cfd-ac0b-484d4186bec4
கொவிட்-19 இரண்டு ஆண்டு சிரமங்கள் மறைந்து மீட்சியை எதிர்பார்ப்பதாகக் கூறினார் திருமதி ஜெயலட்சுமி. அவருடன் அவரது பேத்தி தரிஷா. -

இல்லத்தரசியாக இருந்து வாழ்க்கையில் நிறைவு கண்ட திருமதி ஜெயலட்சுமி, 66, வரும் ஆண்டில் தமது பேரப்பிள்ளைகளின் கல்வி சிறக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்.

கடந்த ஈராண்டாக சிங்கப்பூரில் நீடித்துவந்துள்ள கொவிட்-19 கிருமிப்பரவலால் படிக்கும்போது அவ்வப்போது சிரமங்கள் ஏற்பட்டதாகக் கூறினார் பல்கலைக்கழக மாணவியும் திருமதி ஜெயலட்சுமியின் பேத்தியுமான தரிஷா, 21.

இனி வரும் ஆண்டு சீராக அமையவேண்டும் என வேண்டிக்கொள்வதாக அவர் கூறினார்.

பத்தாண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார்கள் தொழில்நுட்பர் தியாகுவும் தாதியான பிரேமாவும்.

கடந்த ஆண்டு இறுதியில் சிங்கப்பூர் நிரந்தரவாசம் பெற்றுள்ள நிலையில் சிங்கப்பூரில் தங்களது புதிய வாழ்க்கை வெற்றிகரமாகத் தொடங்கும்படி வேண்டியதாக அவர்கள் கூறினர்.

"சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பயணங்கள் இவ்வாண்டுக்குள் சுமுகமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறவேண்டும் என்பதையும் பிரார்த்திக்கிறோம்," என்று ஈப்போவைச் சேர்ந்த தியாகுவும் கோலாலம்பூரைச் சேர்ந்த பிரேமாவும் கூறினர்.

சொத்துச் சந்தை முகவராகப் பணியாற்றும் திரு ஃபாருக், கொவிட்-19 கிருமிப்பரவலின் தாக்கத்திலிருந்து தமது துறை நன்கு மீண்டு வந்தது குறித்த மகிழ்ச்சியில் இருப்பதற்காக நன்றி தெரிவித்தார்.

இதற்காகக் கோவிலுக்குச் சென்று நன்றி கூறியதாகச் சொன்னார் திருஃபாருக்.

பொங்கல் கொண்டாட்டங்கள் இவ்வாண்டின் தொடக்கத்திற்குத் தித்திப்பு சேர்த்திருப்பதாகக் கூறினார்.

"வேறு பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள் இன்றும் சிரமப்படுகிறார்கள் என்பதை அறிவேன். அவர்களது நிலை விரைவில் சீரடையவேண்டும் என்பதையும் வேண்டுகிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.

சுகாதாரத் துறை பணியாளராகப் பணியாற்றும் 56 வயது விஜயலட்சுமி, பொதுமக்கள் தொடர்ந்து சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவேண்டும் என வேண்டிக்கொள்வதாகக் கூறினார்.

-

புனித மரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தின் செயலாளரான திரு அண்ணாதுரை அழகப்பன் (படத்தில் மனைவி சுஜாதா நன்னூவுடன்), பக்தர்கள் அனைவருக்கும் பொங்கல் தினக் கொண்டாட்டங்களைத் தெரிவிக்க விரும்புவதாகக் கூறினார்.

ஆலயத்தில் கண்ணாடிக் கூரைக்கான கட்டுமானப் பணிகள் இவ்வாண்டுக்குள் வெற்றிகரமாக நிறைவுபெறவேண்டும் என்பது அவரது பொங்கல் வேண்டுதல்.