1930களில் சிங்கப்பூரை வலம் வந்த உயிர்க்கொல்லி தொற்றுநோய்களால் தாயாரையும் சகோதரிகளையும் இழந்த 89 வயது தங்கவேலு காளிமுத்துவின் பிள்ளைப் பருவத்தில் தனிமையை உணர்ந்ததாகக் கூறினார். சிறுவனாக இருந்தபோது ஜப்பானிய வீரரால் கன்னத்தில் அறையப்பட்ட தருணம், வாழ்நாளில் மறக்க இயலாதது என்றார் திரு காளிமுத்து.
சுமார் ஏழு வயதில் இச்சம்பவம் நடந்ததாகக் கூறிய திரு காளிமுத்து, சாலையோரத்தில் அமர்ந்து அழுததை நினைவுகூர்ந்தார். "வழியில் சென்றுகொண்டிருந்த ஒரு தமிழர் விசாரித்தபோது நடந்ததைக் கூறினேன். அவர் ஜப்பானிய உயர் அதிகாரி ஒருவரிடம் பேச, என்னை அறைந்தவர் கண்டிக்கப்பட்டார்," என்றார்.
1935ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் தேக்கா வட்டாரத்திலுள்ள டன்லப் ஸ்திரீட்டில் தங்கவேலு காளிமுத்து பிறந்தார். "என் அப்பாவும் சிங்கப்பூரில் பிறந்தவர். தாத்தா இந்தியாவிலிருந்து வந்தவர்," என்று கூறினார்.
திரு தங்கவேலுவின் தம்பியைப் பெற்றெடுத்த பிறகு அவரது தாயார் காச நோயால் உயிரிழந்தார். ராஃபிள்ஸ் ஹோட்டலில் உபசரிப்புத் துறையில் தந்தை பணியாற்றிய சமயத்தில் தமது பாட்டி 'நாசி லிமாக்' எனும் மலாய் உணவு விற்று வந்ததைப் பகிர்ந்துகொண்டார்.
பேராக் ரோட்டில் பாட்டியுடன் தங்கிய ஒரு வீட்டின் கீழ் சுரங்கம் இருந்ததால் போர் விமானக் குண்டுகளிலிருந்து தப்பித்ததாகக் கூறினார். போர் முடிந்த பிறகு ராயல் இங்கிலிஷ் பள்ளியில் நான்காம் வகுப்பை முடித்தார் திரு காளிமுத்து.
1957ல் இவர் சிலாங்கூரில் பிறந்த கமலாவைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது சிராங்கூன் வட்டாரத்தில் வசிக்கும் இவருக்கு ஜப்பானிய தேசிய கீதம் இன்னும் நினைவில் உள்ளது. மூன்று பிள்ளைகள், ஐந்து பேரப்பிள்ளைகள், ஒரு கொள்ளுப் பேரன் இவருக்கு உள்ளனர்.

