கவின்விழி கதிரொளி
சிங்கப்பூரரான முனைவர் பிரியதர்ஷினி இந்திய திரையுலகில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பாடியிருக்கிறார்.
இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை, கர்நாடக இசை ஆகியவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றவர் பிரியதர்ஷினி. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் பாடிய இவருக்கு, கடந்த ஆண்டு செப்டம்பரில் மைசூர் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
கன்னடம் மற்றும் தமிழ் திரைத்துறையில் இசை என்ற தனது ஆராய்ச்சிக்காக இசைத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், அந்தப் பட்டத்தை இசைக்குச் சமர்ப் பிப்பதாகக் கூறினார்.
"நமது இந்திய திரையுலகில் பல இசை வகைகள் உள்ளன. திரைப்பட இசையைப் பற்றி இதுவரை யாரும் ஆராய்ச்சி மேற்கொண்டதாகத் தெரியவில்லை. இசைக்காக எனக்குக் கிடைத்த முனைவர் பட்டத்தை என்னுடைய சமர்ப்பணமாகக் கருதுகிறேன்," என்றார் பிரியதர்ஷினி.
சிங்கப்பூரில்தான் தமது இசைப் பயணம் தொடங்கியது என்பதில் இவர் பெருமிதம் கொள்கிறார். பள்ளிப்பருவத்திலிருந்தே பல போட்டிகளில் பங்கெடுத்து வெற்றிபெற்ற இவருக்கு, இவர் கல்வி பயின்ற ஈசூன் உயர்நிலைப் பள்ளி 'நைட்டிங்கேல்' பட்டம் வழங்கியது.
'ஒலி 96.8' வானொலி நடத்திய 'மாணவர் பாட்டுத்திறன் போட்டி'யில் வென்ற பிரியதர்ஷினிக்கு சிறப்புப் பரிசாக இந்தியா சென்று, இளையராஜா, வித்யாசாகர், கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்களைச் சந்திக்கும் அரிய வாய்ப்பு அளிக்கப் பட்டது.
"இத்தகைய பெரும்பிரபலங்களைச் சந்தித்து அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததை நான் வாழ்நாளில் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன்," என அவர் தெரிவித்தார்.
பாட்டு மட்டுமல்ல நடிப்பிலும் இவர் கைதேர்ந்தவர். பல சிங்கப்பூர் நிகழ்ச்சிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். 'நினைத்தாலே இனிக்கும்' போன்ற வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலைஞராகவும் இருந்துள்ளார்.
விடுமுறைப் பயணமாக இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது தமது தந்தையின் நண்பரான இசை அமைப்பாளர் பரத்வாஜை இவர் சந்தித்தார்.
பிரியதர்ஷினியின் இனிய குரல் திரு பரத்வாஜைக் கவர்ந்தது. அதன் தொடர்ச்சியாக, 2003ஆம் ஆண்டு நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, 'காதல் டாட் காம்' திரைப்படத்தில் பாடகர் ஹரிஹரனுடன் தமது முதல் பின்னணிப் பாடலைப் பாடும் வாய்ப்புப் பெற்றார். 'காதல் காதல்' என்னும் அந்தப் பாடலை பழனிபாரதி எழுதி இருந்தார்.