நம் இந்திய சமுதாயத்தில் மாற்றங்களைக் கொண்டு வர நினைப்பவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. கடந்த ஜனவரி 22ஆம் தேதி தொடங்கப்பட்ட 'தி எய்ட்டீன் ஸ்டெப்ஸ்' எனும் குழு அனைத்து வயதினருக்கும் சமூக சேவை ஆற்ற பல வாய்ப்புகளை அளிக்கின்றது.
முதன்முதலாக நன்கொடை வழங்கிய சில ஐயப்ப பக்தர்களுக்கு நன்றிகூறும் வகையில் குழுவிற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது. சபரிமலைக்குச் செல்லும் பதினெட்டு படிகளையும், அவை கற்றுக்கொடுக்கும் பதினெட்டுப் பாடங்களையும் 'தி எய்ட்டீன் ஸ்டெப்ஸ்' என்ற பெயர் குறிக்கின்றது.
"பதினெட்டுப் பாடங்களில், நாங்கள் கடைசி இரண்டு பாடங்களான கல்வி மற்றும் அறியாமையை முதன்மைப்படுத்துகிறோம். அறியாமையை அகற்றிப் புதிய அம்சங்களைக் கற்பிப்பதே எங்கள் நோக்கம்," என்றார் குழுவின் இணை நிறுவனரான ஷோபனா பன்னீர்.
வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சுகாதாரம், பெண்ணியம் போன்ற பிரச்சினைகளைப் பற்றி இந்திய சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த இக்குழு விரும்புகின்றது.
நேற்று ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் 'சி' பகுதியில் குப்பை அகற்றும் நடவடிக்கையை, பொதுச் சுகாதார மன்றத்துடன் சேர்ந்து அது நடத்தியது. காலை பத்தரை மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை, ஏறக்குறைய 20 தொண்டூழியர்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக்கும் முயற்சியில் இறங்கினார்கள்.
"சுகாதாரத்தைப் பற்றிய விழிப்புணர்வு சிங்கப்பூரில் அதிகம். அந்த விதத்தில், நாங்களும் எங்கள் பங்கை ஆற்றி இந்திய சமுதாயத்தில் இதைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க முயற்சி செய்கிறோம்," என்றார் குழுவின் இணை நிறுவனர் இளமாறன்.
அனைத்துலக மகளிர் தினமான மார்ச் எட்டாம் தேதி முதல் 31ஆம் தேதிவரை தங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் 'அன்ஸங் காடஸெஸ்' எனும் நடவடிக்கையை இவர்கள் நடத்துகின்றார்கள். பல துறைகளையும் பிண்ணனிகளையும் சார்ந்த இந்தியப் பெண்களின் அனுபவங்களை இதன் மூலமாக பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.
"பேர், புகழ் போன்றவை இல்லையென்றாலும் நம் சமுதாயத்தில் முன்மாதிரியாக விளங்கும் பெண்களைக் கொண்டாடும் வகையிலான நடவடிக்கை இது," என்றார் இளமாறன்..

