மாதவிடாய் என்பது பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படுகின்ற சாதாரணமான உடல் செயல்பாடு ஆகும். ஆனால், அதைப் பற்றிய அறியாமை நம் சமுதாயத்தில் இன்னும் நிலவுகிறது.
அதனால், ஏற்கெனவே பொருளாதாரச் சிக்கலை எதிர்நோக்கும் பெண்களில் சிலருக்கு அந்த காலக்கட்டத்தில் பயன்படுத்தத் தேவைப்படும் விடாய்க்கால அணையாடை (சானிட்டரி நாப்கின்) போன்ற பொருள்களை வாங்க இயலாத நிலை.
மாதவிடாய் பற்றி வெளிப்படையாகப் பேசுவதை அதிகரித்து, 'சானிட்டரி நாப்கின்' வாங்குவதில் உள்ள சிக்கல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் 'கோ வித் தி ஃபுளோ' அமைப்பு செயல்படுகின்றது.
சமூக மன்றங்களின் வழி சேவை செய்துகொண்டிருந்த சில இளையர்கள், குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களில் 'சானிட்டரி நாப்கின்' போன்ற மாதவிடாய்ப் பொருள்கள் வழங்கப்படுவதில்லை என்பதைக் கவனித்தார்கள். இந்தப் பிரச்சினையை கண்டறிந்த இவர்கள் மற்ற சில நண்பர்களோடு சேர்ந்து 'கோ வித் தி ஃபுளோ' எனும் அமைப்பைத் தொடங்கினார்கள்.
2017, 2018ஆம் ஆண்டுகளுக்கான சிங்கப்பூர் அரசாங்கத்தின் புள்ளிவிவரத் துறைத் தரவுகளின்படி, இங்கு உள்ள குறைந்த வருமானக் குடும்பங்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினர் மாதாமாதம் சராசரியாக 2,570 வெள்ளியைச் செலவிடுகிறார்கள். ஆனால், இக்குடும்பங்களின் மாத வருமானம் ஏறக்குறைய 2,235 வெள்ளியாக இருப்பதால், இவர்களுக்கு $335 வரை பற்றாக்குறை ஏற்படுகிறது.
மேலும், மாதவிடாய்ச் சுழற்சியை எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய்ப் பொருள்களுக்காக 36 வெள்ளியிலிருந்து 72 வெள்ளிவரை ஒவ்வோர் ஆண்டும் செலவு செய்கிறார்.
இந்நிலையில், குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அவற்றை வாங்குவதில் எதிர்நோக்கும் நிதிச் சிக்கலைத் தீர்க்க, 'கோ வித் தி ஃபுளோ' அமைப்பு 'சானிட்டரி நாப்கின்' பொட்டலங்கள் போன்ற மாதவிடாய்ப் பொருள்களைத் திரட்டுவதில் ஈடுபடுகின்றது.
சமூக மன்றங்கள், கல்வி நிலையங்கள், பேரங்காடிகள் ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள பெட்டிகளில் மாதவிடாய்ப் பொருள்களை பொதுமக்கள் நன்கொடையாக வழங்கலாம்.
இதுவரை இவர்கள் 6,000த்துக்கும் அதிகமான 'சானிட்டரி நாப்கின்' பொட்டலங்களைத் திரட்டி அவற்றை வெவ்வேறு குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு அளித்துள்ளார்கள்.
"நம் சமுதாயத்தில் எத்தனை பேர் மாதவிடாயைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகின்றார்கள்? இதைப் பற்றிப் பேசாததால்தான் மாதவிடாய் தொடர்பான நோய்கள், மாதவிடாய்ப் பொருள்களை வாங்க இயலாத வறுமை போன்ற பிரச்சினைகளைப் பற்றிய அறியாமை நம்மில் பலரிடையே நிலவுகின்றது" என்றார் 'கோ வித் தி ஃபுளோ' அமைப்பின் சுந்தரம் மோகன் ஷக்தி.
'கோ வித் தி ஃபுளோ' அமைப்பு அதன் சமூக ஊடகப் பக்கத்தில், மாதவிடாயைப் பற்றியும் அதுதொடர்பான நோய்களைப் பற்றியும் பதிவிடுகின்றது. குறிப்பாக, அவர்கள் ஆண்களிடமும் இவை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க விழைகின்றார்கள்.
"மாதவிடாய் என்பது பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. ஆண்களும் இதைப் பற்றி தெரிந்துகொண்டால்தான் மாதவிடாய் பொருள்கள் ஓர் அடிப்படைத் தேவை என்பதை உணர்வார்கள். அதோடு, இப்பொருள்களை நன்கொடையாக வழங்கவும் மேலும் பலரும் முன்வருவார்கள்," என்றும் இவர் கூறினார்.
மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்துள்ள இளையர்கள்