எஸ்.விக்னேஸ்வரி
செய்தித்தாள்கள் எப்போதுமே சமூகத்தின் உயிர்நாடியாக விளங்கி வருகின்றன. இணையமும் வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் செய்தித்தாளே தகவல்களையும் செய்திகளையும் மக்களுக்கு அறிவிக்கும் ஒரே ஊடகமாக விளங்கியது.
சிங்கப்பூரில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தமிழ் பத்திரிகைகள் அச்சிடப்பட்டு வருகின்றன. சிங்கப்பூரின் முதல் தமிழ் நாளிதழாக அறியப்படும் 'சிங்கை வர்த்தமானி' 1875ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை வெளியிட்டவர் சி.கே.மகுதூம் சாஹிப். இதையடுத்து 1876ல் 'தங்கை நேசனும்', 1877ஆம் ஆண்டு 'சிங்கை நேசனும்' வெளியிடப்பட்டன.
பெரும்பாலும் தமிழ் முஸ்லிம்கள், ஜாவி பெரனாக்கான் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் செய்தித்தாள்களையும், அச்சு பிரசுரங்களையும் வெளியிட்டு வந்தனர்.
இந்திய அரசியல், சமூகச் சீர்திருத்தம், உள்ளூர் நடப்பு விவகாரங்கள் போன்றவை தொடர்பான செய்திகளை வழங்கியதோடு, முக்கிய நிகழ்வுகள் குறித்த கருத்துகளையும் பத்திரிகையாளர்கள் பதிவிட்டுள்ளனர்.
ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்னர் 1922ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட 'தமிழகம்' எனும் செய்தித்தாள் இங்குள்ளவர்களிடையே மொழி உணர்வைத் தட்டி எழுப்பியது. 'தமிழ் நேசன்', 'முன்னேற்றம்', 'சீர்திருத்தம்' போன்ற செய்தித்தாள்கள் தமிழ்ச் சமூகத்தினரிடையே சீர்திருத்த எண்ணங்களைத் தூண்டியதோடு, அரசியல் கட்டுரைகளையும் வெளியிட்டன.
தொடர்ந்து, 1930களில் தமிழ் அச்சுக் கலாசாரம் சிங்கப்பூரில் மறுமலர்ச்சி காணத் தொடங்கியது. 1935ஆம் ஆண்டில் தமிழ் சீர்திருத்தச் சங்கம் திரு கோ. சாரங்கபாணியை ஆசிரியராகக் கொண்டு தொடங்கிய 'தமிழ் முரசு' இன்று வரை சிங்கப்பூரில் செய்திப் பணியாற்றி வருகிறது.
சிங்கப்பூர் இந்திய சமூகத்தின் பண்பாட்டு அடையாளத்தை உருவாக்குவதில் செய்தித்தாள்கள் முக்கியப் பங்காற்றின. தமிழர்களை ஒன்றிணைக்கும் கருவிகளாக அக்காலச் செய்தித்தாள்கள் இருந்தன. பொது அறிவை வளர்த்ததோடு, பகுத்தறிவையும் அவை வளர்த்தன.
சிங்கப்பூரில் அந்தக் காலத்தில் வெளிவந்த தமிழ் சஞ்சிகைகளும் நாளிதழ்களும் இந்திய மரபுடைமை நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவற்றைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்புவோர், நிலையம் ஏற்பாடு செய்யும் சுற்றுலாவில் கலந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையில் தமிழில் நடைபெறும் இச்சுற்றுலா பற்றிய மேல் விவரங்களுக்கு https://www.indianheritage.gov.sg என்ற இணையத்தள முகவரியை நாடலாம்.