ஹர்ஷிதா பாலாஜி
நோன்புப் பெருநாளை முன்னிட்டு சிண்டா அதன் 'செலப்ரேட்' பண்டிகை அன்பளிப்புப் பைகளை நேற்று விநியோகித்தது.
தீவெங்கும் ஏறத்தாழ 400 வசதி குறைந்த குடும்பங்களுக்கு மற்ற சில அமைப்புகளின் உதவியோடு அன்பளிப்புப் பைகளையும் $120 பெறுமானமுள்ள 'என்டியுசி'
பற்றுச்சீட்டுகளையும் சிண்டா வழங்கியது.
அரிசி போன்ற அத்தியாவசியப் பொருள்களுடன் பண்டிகைக்கால பலகாரங்களும் அன்பளிப்புப் பைகளில் இருந்தன.
"ஒருவர் சிரமத்தில் இருக்கும்போது அவரை ஆதரிக்க இந்திய சமூகமும் சிண்டா போன்ற சமூக அமைப்புகளும் இருக்கின்றன என்ற நம்பிக்கையை வளர்ப்பதே இது போன்ற அறப்பணிகளின் முக்கிய நோக்கமாகும்.
"அத்துடன், உதவி கேட்டு முன்வர மேலும் பலர் ஊக்குவிக்கப்
படுவார்கள்," என்றார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு அன்பரசு ராஜேந்திரன்.
கடந்த 21 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த அறப்பணி மூலம் தொடர்ந்து பயனடையும் ஒருவரான திரு பதார்த்தீன் அப்துல் ரஹீம் இந்த ஆண்டிலும்
அன்பளிப்புப் பைகளைப் பெற்றுக்கொண்டார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு இதுபோன்ற ஆதரவு கிடைப்பது அவருக்குப் பேருதவியாக இருக்கிறது என்றும் எவ்வித தயக்கமும் இல்லாமல் அவருக்கு சிண்டா ஒவ்வோர் ஆண்டும் உதவி செய்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
"கொவிட்-19 கிருமித்தொற்று நெருக்கடிநிலைக்குப் பிறகு பலருக்கு உதவி தேவைப்படுகிறது, ஆனால் அவர்கள் முன்வந்து உதவி கேட்க தயங்குகிறார்கள்.
"சிண்டாவின் உதவித் திட்டம் மூலம் வசதி குறைந்தவர்களுக்கு உதவ வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது" என்று தொண்டூழியரான திரு சீனி ஜஹாங்கிர் கனி கூறினார்.
இந்த அறப்பணியில் சிண்டாவுடன் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக், ஜாலான் புசார் தொண்டூழியர் மையம், இந்திய முஸ்லிம் பேரவை, இந்து இளையர் அணி, ஸ்ரீ நாராயண மிஷன், காத்தோங் சத்ய சாய்பாபா நிலையம், இந்திய மகளிர் சங்கம் ஆகிய அமைப்புகள் பங்கேற்றன.
"சிண்டாவுடன் சேர்ந்து நாங்கள் இந்த அறப்பணியில் ஈடு
படுவதால் எங்களால் மேலும் சிறப்பான முறையில் வசதி குறைந்தவர்களுக்கு உதவ முடிகிறது.
"மேலும், பலரும் எங்கள் அமைப்பை நம்பி முன்வந்து தங்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொண்டு உதவி கேட்பதால் நாங்கள் சிண்டாவுக்கும் பல வசதி குறைந்த குடும்பங்களுக்கும் இடையே ஒரு பாலமாக அமை
கிறோம்" என்றார் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் தலைவர் திரு ராஜா முஹம்மது.