ஆ. விஷ்ணு வர்தினி
நேற்று, இன்று, நாளை எனும் கருப்பொருளுடன் நடைபெற்ற 'அக்னி 2022' நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள்,
தமிழர் வாழ்வில் நேற்று இருந்த, இனி இருக்கக்கூடிய புத்தாக்கத்தை நாடகமாகப் படைத்தனர்.
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரியின் தமிழ் மொழி விருப்பப்பாடத்திட்ட மாணவர்களும் தமிழ்மொழி மன்ற மாணவர்களும் நடனம், இசை, நாடகம் கொண்டு பார்வையாளர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தனர். நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக சங்க கால பாண்டிய மன்னராகவும் மகாகவி பாரதியாகவும் மாணவர்கள் வேடமிட்டு பழங்காலத்திலும் புத்தாக்கம் இருந்தது என்பதை உணர்த்தினர்.
சோழர்களின் கட்டடக்கலை, கல்வெட்டு உருவாக்கும் முறை முதலியவற்றை கலைநயத்தோடு விவரித்தனர். தமிழர் பண்பாட்டுக் கூறுகளாக இருந்த ஆரோக்கிய உணவு முறையிலும் உள்ள புத்தாக்கம் பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
தமிழ்மொழியின் அருமை பெருமைகளைப் பற்றி பாடியும் பேசியும் நவீன கலாசாரக் கூறுகளுடன் கதாகாலட்சேப முறையிலும் மாணவர்கள் நிகழ்ச்சியைப் படைத்தனர்.
அக்னி 2022ல் மேடை நாடகம் முத்தாய்ப்பாக அமைந்தது. புத்தாக்க முறையில் இளையர்
களைப் படைக்க ஊக்குவிக்கும் நோக்கில் நடனப் போட்டியும் குறும்பட போட்டியும் இடம்பெற்றன.
நடன இயக்குநர் திருமதி பார்வதி, திருமதி ராகினி தேவி கணேசன், குமாரி கல்பனா ஆகியோர் நடுவர்களாக இருந்து மதிப்பிட்டதில் தேசிய தொடக்கக்கல்லூரி, மில்லெனியா கல்விக்கழகம், ஜூரோங் பைனியர் தொடக்கக்கல்லூரியின் நடனக்குழுக்கள் முறையே முதல் மூன்று வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டன.
தமிழையும் அதனோடு இணைந்த வாழ்வியலையும் மையமாகக் கொண்டு குறும்படம் படைத்த மூன்று வெற்றி பெற்ற அணிகளின் குறும்படங்களும் சிறப்பங்கமாக நிகழ்வில் இடம்பெற்றன. உள்ளூர் திரைப்பட இயக்குநர் திரு சலீம் ஹாடி, முன்னாள் மாணவர்கள் திரு யோகேஷ், குமாரி மரியா ஆகியோரின் மதிப்பீட்டில், ஈசூன் இன்னோவா தொடக்கக்கல்லூரி, தேசிய தொடக்கக்கல்லூரி, தெம்பனிஸ் மெரிடியன் தொடக்கக்கல்லூரி, ஆகிய அணிகள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தன.

