கி. ஜனார்த்தனன்
ராணுவத்தில் பெண்கள் ஆண்
களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல. நேர்மறையான எண்ணங்களே வெற்றியின் இரகசியம் என்கிறார் சிங்கப்பூர் ஆகாயப் படையில் ராணுவ நிபுணராகப் பணியாற்றும் லட்சுமணன் பவானி, 49.
சிங்கப்பூரின் வான்வெளியை உற்றுக் கண்காணிக்கும் படைகளில் ஒன்றான 'ஸ்குவாட்ரன் 200'ல் திருமதி பவானி பணியாற்று கிறார். 'ஜிசிஇ' சாதாரண நிலை தேர்வை முடித்து 1989ஆம் ஆண்டில் சிங்கப்பூர் ஆயுதப் படையில் சேர்ந்த பவானி, 'எம்இ3' தரநிலைக்கு உயர்ந்துள்ளார். 24 மணி நேரமும் செயல்படும் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்பு, பயிற்சி மற்றும் நலனைக் கண்காணித்து வருகிறார். சிங்கப்பூரில் நடந்த வடகொரிய-அமெரிக்க உச்சநிலை சந்திப்பும் ஆண்டுதோறும் நிகழும் தேசிய தின அணிவகுப்புகளும் இவருக்கு மறக்க முடியாத தருணங்களைத் தந்துள்ளன.
தமது வேலைக்குக் கவனம் மிக அதிக அளவில் தேவைப்பட்டாலும் அதனைப் பதற்றமில்லாமல் நிதானத்துடன் தமது குழுவினருடன் அவர் செய்து வருகிறார். 2001ஆம் ஆண்டு நடந்த செப்டம்பர் 11 தாக்குதல் முதல் உக்ரேன் மீதான தற்போதைய ரஷ்ய படையெடுப்பு வரை, உலகில் நிகழும் ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதல் அல்லது பூசலிலிருந்து தாமும் தமது குழுவினரும் கற்றுக்கொள்வதாகக் கூறினார்.
பெண்களுக்குத் தரப்படும் பயிற்சி ஆண்களுக்கு எந்த விதத்திலும் மாறுபட்டதல்ல என்றார் திருமதி பவானி. சிங்கப்பூர் ஆகாயப் படையில் பாலின பேதம் இல்லை என்று அவர் கூறினார்.
எந்த வேலையாக இருந்தாலும் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்ய முடிந்தால் பிறர் கூறுவதைப் பற்றி அதிகம் கண்டு கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பது திருமதி பவானியின் கருத்து.
"என்னைப் பொறுத்தவரையில் நான் ஆயுதப் படையில் மதிப்புமிக்கவராகத் திகழ்கிறேன்," என்றார் 2019ல் செயல்திறனுக்கான தேசிய தின விருதைப் பெற்ற திருவாட்டி பவானி. அவரது கணவரும்
ஆகாயப் படையில் ஒரு நிபுணராகப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலை காரணமாக குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டாலும் குடும்ப உறுப்பினர்கள் புரிந்துணர்வுடன் நடந்துகொள்வதாக திருவாட்டி பவானி தெரிவித்தார்.

