யானைக்கால் நோயால் கடந்த இருபது ஆண்டுகளாக அவதியுறும் சடையன் கரா அப்துல் காதர், 85, சமூகத் தொண்டர்கள் தரும் ஆதரவு, தமக்கு உந்து சக்தியாக இருந்து துணிச்சலுடன் வாழ ஊக்குவிப்பதாகக் கூறினார்.
சை சீ சாலையில் உள்ள ஓர் அறை வீட்டில் தனியாக வசிக்கும் திரு காதர், முன்னதாக மளிகைக் கடை வைத்திருந்தார்.
இந்தியாவில் வசிக்கும் தமது மனைவிக்கும் எட்டு பிள்ளை
களுக்கும் பணம் அனுப்பி ஆதரித்துவந்த அவரை முதுமைப் பருவத்தில் பராமரிக்க யாரும் இல்லை.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பொது உதவித் திட்டத்தின் மூலமாக மாதத்திற்கு $600 பெறும் திரு காதர், பெரும்பாலும் சாப்பிடுவது ரொட்டி, ஓட்ஸ் அல்லது சில நேரங்களில் அவருக்கு விநியோகம் செய்யப்படும் சமைக்கப்பட்ட உணவு.
புனித ரமலான் மாதத்திற்காக இந்திய முஸ்லிம்களின் நிபுணத்துவத் திறன்களை வளர்க்க முற்படும் இம்புரோஃப் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள 'ரமலான் டியன்ஸ்' என்ற உணவு விநியோகத் திட்டம் மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
22 ஏப்ரல் முதல் நாளை வரை நீடிக்கும் இந்த விநியோகத் திட்டத்தில் 15 குடும்பங்களுக்கு மொத்தம் 539 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும்.
திரு காதருக்கு சமைத்த உணவு எப்போதும் கிடைப்பதில்லை. சில நேரங்களில் மிகவும் பசித்தாலும் அதனைப் பொறுத்துக்கொண்டு போவது தமக்கு வழக்கமாகிவிட்டதாக தமிழ் முரசிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.
ஆயினும், தற்போது
தொண்டூழியமும் உதவும் மனப்பான்மையும் பெருகிவிட்டதைக் காணும்போது பெரிதும் மகிழ்வதாக திரு காதர் கூறினார்.
"நான் சிறு வயதாக இருந்த காலகட்டத்தில் இருந்தோரைவிட இப்போதுள்ள இளையர்களிடையே உதவும் மனப்பான்மையை அதிகம் காண்கிறேன்.
"இன, சமய பேதமின்றி உதவி செய்யும் அவர்களுக்கு என் மனமார்ந்த பிரார்த்தனைகள் என்றென்றும் இருக்கும்," என்று அவர் மனம் நெகிழ்ந்து கூறினார்.
திரு காதரின் வாழ்த்து மொழி
தமக்கு மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக அவரிடம் உணவை நேரடியாக வழங்கிய தொண்டூழியரான தொடக்கப்பள்ளி ஆசிரியர் பூனம் தாபர், 58 மனநிறைவுடன் தெரிவித்தார்.
இஸ்லாமிய சமயத்தின் முக்கிய போதனைகளில் பிரதிபலன் எதிர்பாராமல் பிறருக்கு உதவுவதும் ஒன்று.
எனவே, தம்மால் முடிந்தவரைத் தொடர்ந்து உதவி தேவைப்படுவோருக்கு உணவு வழங்கி ஆதரவுக்
கரம் நீட்டப்போவதாக இம்புரோஃப் அமைப்புடன் இணைந்து இவ்வாண்டு உணவு விநியோகத்தில் முதன்முறையாகப் பங்கேற்ற 'நியூரெசிக்கி' உணவகத்தின் உரிமையாளர் திரு அப்துல் கரீம், 46, தெரிவித்தார்.
செய்தி: கி. ஜனார்த்தனன்

