ஆ. விஷ்ணு வர்தினி
சித்திரைப் புத்தாண்டை தங்கள் சீன, மலாய் நண்பர்களுடன் ஜூரோங் ஸ்பிரிங் வட்டாரத்தைச் சேர்ந்த தமிழர்கள் கொண்டாடினர்.
ஜூரோங் ஸ்பிரிங் இந்திய நற்பணிச் செயற்குழுவும் பல இன, பல சமய குழுவும் இணைந்து நடத்திய சித்திரைத் திருநாள் கொண்டாட்டம் கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
டமாரு குழுவினரின் பறை
இசையுடன் தொடங்கிய விழாவில், புஷ்பார்ப்பணம் நடனக்
குழுவின் தமிழர் பாரம்பரிய நடனங்களும் சிலம்பம் சிங்கப்பூர் அமைப்பின் சிலம்பாட்டமும் இடம்பெற்றன.
ஏறத்தாழ 150 பேர் நிகழ்ச்சியை நேரில் கண்டு களித்தனர்.
ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் ஹுவாங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தமிழ் இசையுடன், சீன, மலாய் பாடல்களும் பார்வையாளர்களை மகிழ்வித்தன. சீன, மலாய் படைப்பாளர்களுடன் பல இன பார்வையாளர்களும் விழாவில் கலந்துகொண்டதாகக் கூறினார் ஜூரோங் ஸ்பிரிங் இந்திய நற்பணிச் செயற்குழு உறுப்பினர் திரு ஷியாம் கண்ணன்.
"சிலர் தீபாவளியைத்தான் தமிழர்களின் புத்தாண்டாக நினைக்கின்றனர். அவ்வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது இந்நிகழ்வு. இவ்விழாவில் பல இனத்தவர்களும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்ததாக அவர்கள் எங்களிடம் தெரிவித்தனர். அது எங்களுக்கு மனநிறைவைத் தந்தது," என்றார் அவர். பஞ்சாபிய பாரம்பரிய
நடனமான பாங்க்ராவோடு நிகழ்ச்சி முடிவுற்றது.
பார்வையாளர்களையும் மேடையில் ஆட வைத்துவிட்டனர் ஜோஷிலி பாங்க்ரா நடனக்குழுவின் நடனமணிகள்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் வசதி குறைந்த 15 மூத்தோருக்கு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய், அரிசி உட்பட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய அன்பளிப்புப் பைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சமுதாயத்திற்கு முடிந்த வகையில் உதவ ஏற்பாட்டாளர்கள் முற்பட்டதைப் பற்றி திரு ஷியாம் பகிர்ந்துகொண்டார்.

