திருமதி நாகஜோதி மாரிமுத்து கடந்த 24 ஆண்டுகளாக தனக்கென வாழாமல் மகனுக்காகவே வாழ்ந்துவருகிறார்.
மழலைச் சிரிப்பும் வெள்ளந்திக் குணமும் கொண்ட 27 வயது கிரணுக்கு பக்கபலமாக இருக்கிறார் இவர்.
இன்று 'எஸ்ஐஏ-மைண்ட்ஸ்' வேலைவாய்ப்பு மேம்பாட்டு மையத்தில் முழு நேரப் பயிற்சி அதிகாரி இவர். இதற்கு முக்கியக் காரணம் குழந்தையாக இருந்த கிரணுக்கு ஏற்பட்ட திடீர்த் துயரம். 1998ஆம் ஆண்டு மூன்று வயது கிரணுக்கு திடீரன்று வலிப்பு ஏற்பட்டது. நாளடைவில் ஒரே நாளில் முப்பது முறைகூட வலிப்பு ஏற்பட்டதால் கிரணுடைய மூளை வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது.
முதலில் தமது மகனின் நிலைமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் திண்டாடினாலும் பின்னர் அதிலிருந்து மீண்டு கிரணுக்குத் தாமே சில திறன்களைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார் ஜோதி. சில அடிப்படையான வாழ்க்கைத் திறன்களை மகனுக்குப் புரியும்வரை, நினைவில் பதியும்வரை கற்றுக்கொடுத்தார் அன்னை.
கேலியும் கிண்டலும் செய்த அனைவருக்கும் தம் பையனாலும் சாதாரண பிள்ளைகளைப் போல வாழ்வில் வெற்றிபெற முடியும் என நிரூபிக்க விரும்பி மேன்மேலும் பல முயற்சிகளில் ஈடுபட்டார்.
கிரணுக்கு 10 வயதானபோது லீ கொங் சியான் கார்டன் பள்ளியில் இடம் கிடைக்கவே வங்கியாளர் பணியை விட்டுவிட்டு, மகனின் முழுநேரப் பராமரிப்பாளர் ஆனார். ஆசிரியர் ஒருவரின் தூண்டுதலில் பெற்றோர் ஆதரவுக் குழுவில் சேர்ந்தார் ஜோதி. பின்னர் பயிற்சி அதிகாரியாகப் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. 'மைண்ட்ஸ்' நிலையத்தோடு மட்டும் அவரது சேவை நிறைவடையவில்லை. விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட கிரணுக்கும் வேறு சில பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு வாரமும் பயிற்சி அளிக்கிறார்.
விளைவு? இரண்டு முறை சிங்கப்பூர் தேசிய விளையாட்டு சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 'போச்சே' எனப்படும் பந்து விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றார் கிரண்.
தம்மைத் தட்டிக்கழித்த அனைவருக்கும் தம் திறமையை நிரூபித்த இவருக்கு இப்போது புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மகனின் ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதே அன்புத் தாயார் ஜோதியின் இலக்கு.
மகனை எப்போதுமே சிறுபிள்ளை போல நடத்தாமல் உலக நியதிகளைக் கற்றுக்கொடுத்து அவ்வப்போது வெளி இடங்களுக்கு கிரணைத் தனியாக அனுப்புகிறார் ஜோதி. மகன் சொந்தக் காலில் நிற்க இது உதவும் என்கிறார் இந்தத் துணிச்சலான தாயார்.