கிடங்கு ஒன்றில் தரநிலை மேலாளராகப் பணிபுரியும் 53 வயது பிரகாஷ் ராமகிருஷ்ணன், ஜப்பானில் தோற்றுவிக்கப்பட்ட நிச்சிரன் பௌத்தத்தைப் பின்பற்றுகிறார். உருவ வழிபாடு இல்லாத இந்த வகை, பௌத்தமதத்தின் மற்ற பிரிவுகளிலிருந்து வேறுபடுகிறது.
இந்துக் குடும்பத்தில் பிறந்த இவரின் பாட்டி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடியபோது நிச்சிரன் பௌத்தத்தில் போதிக்கப்படும் 'டைமோக்கூ' மந்திரத்தைத் தனது தாயார் திரும்பத் திரும்பச் சொன்னதாகவும் அதனைத் தொடர்ந்து பாட்டி குணமடைந்ததாகவும் நினைவுகூர்ந்தார்.
"அப்போது எனக்கு 16 வயது. நான் விளையாட்டுத்தனமாக இருந்தபோதும் இந்தச் சம்பவம் என்னில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது," என்றார் அவர்.
பிறகு தொடக்கக்கல்லூரியில் பயின்றபோது தனது பணப்பை தொலைந்ததும் அதே மந்திரத்தைச் சொன்னதால் அது திரும்பக் கிடைத்ததாக அவர் கூறினார்.
நிச்சிரன் பௌத்தத்தில் தன்னம்பிக்கை பெரிதும் வலியுறுத்தப்படுவதால் அது தனக்குப் பிடித்துப்போனதாகக் கூறினர் பிரகாஷ்.
"என் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள எனக்கு வெளியே உள்ள தெய்வங்களையோ மனிதர்களையோ சார்ந்திருக்க வேண்டியதில்லை. எனது வாழ்க்கை நிலையை நான் உயர்த்தும்போது என் வருங்காலம் மாறும் என்பதே என் நம்பிக்கை," என்றார் அவர்.
வாழ்க்கையில் முன்செய்த வினைகளால் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு அவற்றை நல்ல விளைவுகளை உண்டாக்கப் பயன்படுத்தும் முறையை 'நஞ்சை மருந்தாக்குவது' என்று பௌத்தம் போதிப்பதாக அவர் பகிர்ந்துகொண்டார்.
அன்றாடம் இரண்டு முறை 'டைமோக்கூ' மந்திர உச்சரிப்பில் ஈடுபடும் இவர், பௌத்த நூல்களைப் படிப்பதுடன் சிங்கப்பூர் சோக்கா கக்காய் சங்கத்தின் நடவடிக்கைகளிலும் பங்குகொள்கிறார்.
செய்தி: கி.ஜனார்த்தனன்