கி. ஜனார்த்தனன்
இந்து அறக்கட்டளை வாரியத்தின் இந்து இளையர் கட்டமைப்பு இம்மாதம் 14ஆம் தேதி இளையர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அறச் சிந்தனைகளையும் வாழ்வியலையும் இளையர்களுக்கு அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கம்.
சிராங்கூன் சாலையில் உள்ள 'பிஜிபி' மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 15 முதல் 35 வயது வரையிலான 50க்கும் மேற்பட்ட இளையர்கள் பங்கேற்றனர்.
இந்து சமயம், ஆயுர்வேதம் போன்றவை குறித்த கருத்தரங்குகள், உரைகள் ஆகியவற்றின் மூலம் தகவல்களை அறிந்துகொள்வது மட்டுமின்றி சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபெறவும் இளையர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
பாரம்பரியத் தற்காப்புக் கலையான களரிப்பயிற்றை இளையர்க்குக் கற்றுத்தந்தார் 'களரி அகடமி'யின் ஜி. வேதகிரி. 'வாழும் கலை' அமைப்பின் ராஜரத்னம் சதாசிவம் தியான அங்கத்தை வழிநடத்தினார்.
பங்கேற்ற இளையர்களிடம் ஆயுர்வேதக் குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டார் 'யூனியன் யோகா ஆயுர்வேதா சிங்கப்பூர்' அமைப்பைச் சேர்ந்த திருவாட்டி பர்னெல்லா ராயப்பன்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்து அறக்கட்டளை வாரியத்தின் நிர்வாக உறுப்பினரும் இந்துக் கல்விப் பிரிவில் இந்து மதம் குறித்து கற்றுத் தருபவருமான திரு க. செங்குட்டுவன், சைவ உணவு முறை, ஊழ்வினை போன்றவை தொடர்பான கேள்விகளுக்கு எளிமையாக விளக்கமளித்தார்.
எது சரி எது தவறு என்பதை பல்வேறு கண்ணோட்டங்கள் மூலம் விளக்கி இளையர்கள் சுயமாக முடிவெடுக்க இந்நிகழ்ச்சி உதவுவதாகக் கூறினார் இந்து இளையர் கட்டமைப்பின் தலைவரான 30 வயது கார்த்திக் ராமசாமி.
"கண்டறிதல், விவாதம், புதிய அனுபவம் என இன்றைய இளையர்களின் நாட்டங்களை மனத்தில் கொண்டே இப்பயிலரங்கு வடிவமைக்கப்பட்டது," என்று வாரியத்தின் ஆய்வுக்குழுத் தலைவர் மதுபாலா பாலகிருஷ்ணன் கூறினார்.
குழுக்களாகப் பிரிக்கப்பட்ட இளையர்களை வழிநடத்தியோரில் ஒருவரான 29 வயது பவித்திரா ஷர்முகம், மனநல விவகாரங்களில் இந்து சமயத்தின் வெவ்வேறு பார்வைகள் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
20 வயது தேசிய சேவையாளரான நவீன் குமார், இறை வழிபாட்டில் ஈடுபடுவதற்கான வழிமுறைகளை இந்நிகழ்ச்சியில் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
சமய நடைமுறைகளுக்கான பின்னணி தெரியாமல் பெரியவர்கள் சொன்னதை அப்படியே பின்பற்றியதாகக் கூறிய 22 வயது தாதிமை மாணவி ஷாலினி செல்வராஜு, சில சடங்குகள் ஏன் செய்யப்படுகின்றன என்று புரிந்துகொண்டதாகவும் அத்துடன் மனத்தை அமைதிப்படுத்தும் உத்திகளைக் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
ஐந்து வயது முதல் பதினைந்து வயது வரையிலான பிள்ளைகளுக்கு 'புரோஜெக்ட் பக்தி' திட்டத்தை நடத்துவதால் அதற்கு மேற்பட்ட வயதுடைய இளையர்க்காக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.