தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி 'உங்கள் நண்பன்' (யுவர் ஃப்ரெண்ட்) எனும் மூத்தோருக்கான தொழில்நுட்பக் கற்றல் திட்டத்தை ஹவ்காங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டம் 55 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் நிரம்பிய மூத்தோருக்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முறைகள் பற்றி கற்பிப்பதோடு அவர்களுடன் நட்பு பூண்டு தொடர்பில் இருப்பதற்கும் வழிவகுக்கிறது.
செயற்குழுவின் உறுப்பினர்கள் தொடர்ந்து வாரந்தோறும் பங்கேற்பாளர்களைத் தொடர்புகொண்டு அவர்களுக்குத் தொழில்நுட்பம் பற்றிய அண்மைய தகவல்களைப் புரியவைக்கின்றனர்.
அத்துடன் திறன்பேசி பயன்பாடுகள், 'வாட்ஸ்அப்', 'ஃபேஸ்புக்' போன்ற செயலிகளைப் பயன்படுத்தும் முறை, மடிக்கணினியைப் பயன்படுத்தும் முறை ஆகியவையும் சொல்லித்தரப்படுகின்றன.
"கொவிட்-19 நோய்ப் பரவல் காலத்திற்குப் பின் தொழில்நுட்பப் பயன்பாடு இன்றியமையாததாக ஆகியிருக்கிறது.
'உணவகங்களில் உணவு வாங்குவதைக்கூட 'கியூஆர்' குறியீடு வழியாகச் செய்துவரும் தொழில்நுட்பக் காலகட்டத்தில், மூத்தோரும் இந்தப் பயணத்தில் நம்முடன் இணைவது மிகவும் அவசியம். எனவே அவர்கள் இல்லம் தேடிச் சென்று தொழில்நுட்பத்தைக் கற்பிக்கிறோம்.
"அத்துடன் ஆர்வம் உள்ளோருக்கு எளிய வகை திறன்பேசி, மடிக்கணினிகள் போன்றவற்றை வழங்குகிறோம்.
"இதில் இணைந்து பயன்பெற விரும்பும் மூத்தோர் ஹவ்காங் சமூக மன்றத்தை நாடலாம்," என்று ஹவ்காங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவர் ராஜா மோகன் கூறினார்.
ஹவ்காங் அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் லீ ஹாங் சுவான், "இதன் மூலம் குடியிருப்பாளர்களைச் சென்றடைவது எளிது; அத்துடன் மூத்தோருடன் தொடர்பில் இருக்கவும் எங்களது தொண்டூழியர்களைப் பற்றி மூத்தோர் அறிந்துகொள்ளவும் இது சிறந்த வாய்ப்பாக அமையும்," என்று குறிப்பிட்டார்.
செய்தி: மோனலிசா