சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஊடகவியலாளர்கள் பட்டியலில் தமிழ் முரசு நாளிதழின் நிறுவன ஆசிரியர் தமிழவேள் கோ. சாரங்கபாணி, முன்னாள் தலைமை ஆசிரியர் வை. திருநாவுக்கரசு ஆகிய இருவரும் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் செய்தியாளர் மன்றத்தின் 50ஆம் ஆண்டு செய்தியாளர் விழாவைக் கொண்டாடும் வகையில் சிங்கப்பூர் ஊடகத்துறையில் தடம் பதித்த 50 சாதனையாளர்களை அங்கீகரிக்கும் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ எனப்படும் புகழ்பெற்றவர்கள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
தமிழர் சீர்திருத்தச் சங்கம் 1935ஆம் ஆண்டு தமிழ் முரசு நாளிதழைத் தொடங்கியது. சங்கத்தின் தலைவராக இருந்த தமிழவேள் கோ. சாரங்கபாணி, 1936ஆம் ஆண்டு முதல் தமிழ் முரசின் ஆசிரியராகப் பொறுப்பேற்று, பல சிரமங்களையும் சவால்களையும் சமாளித்து, 1974ல் தமது இறுதிமூச்சு வரையில் தொடர்ந்து நடத்தினார்.
மலேசியா, சிங்கப்பூர் இருநாடுகளிலும் தன்னிகரற்ற நாளிதழாகத் திகழ்ந்த தமிழ் முரசின் மூலம் சமூகச் சீர்திருத்தங்களையும் முன்னேற்றங்களையும் முன்னெடுத்ததால் இன்றளவும் சிங்கப்பூரின் தன்னிகரற்ற தமிழ் ஊடகவியலாளராகப் போற்றப்படுகிறார் தமிழவேள் கோ. சாரங்கபாணி.
அவர் இந்தியன் டெய்லி மெயில் ஆங்கில நாளிதழையும் நடத்தினார்.
தமிழ் முரசு நாளிதழின் துணையாசிரியர் பதவியேற்று 1952ஆம் ஆண்டு தமது 26வது வயதில் தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் வந்த வை. திருநாவுக்கரசு, சிறந்த ஊடகவியலாளராகச் செயல்பட்டதுடன் மாணவர் முரசு, எழுத்தாளர் பேரவை உள்ளிட்ட பல புதிய பகுதிகளை அப்போதைய தமிழ் முரசில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் கலாசார அமைச்சின் ‘தி மிரர்’ பத்திரிகை உள்ளிட்ட பல பிரசுரங் களின் ஆசிரியராக இருந்தவர்்.
அரசாங்கச் சேவையில் ஓய்வுபெற்ற பின்னர் தமிழ் முரசின் தலைமை ஆசிரியராக 1988இல் பொறுப்பு ஏற்றார். 2000ஆம் ஆண்டில் தமிழ் முரசிலிருந்து ஓய்வு பெறும் வரையில் தமிழ் முரசு நீடித்து நிலைத்திருக்க அவர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளில் முக்கியமானவை, முரசை கணினிமயப்படுத்தியதும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நாளிதழை ஏற்று நடத்த மேற்கொண்ட முயற்சியும் அடங்கும்.
சிங்கப்பூர் ஒளிபரப்புத் துறையின் முன்னோடியான அன்றைய சிங்கப்பூர் ஒளிபரப்பு நிறுவனத்தின் (‘எஸ்பிசி’) செய்தி இயக்குநர் வி. ஆனந்தா பெரேரா, ‘ஒளிபரப்பு செய்தித்துறையின் தந்தை’ என்ற மதிப்பைப்பெற்ற ‘எஸ்பிசி’யின் நடப்பு விவகாரப் பிரிவின் மூத்த துணைத் தலைவர், இயக்குநர் பதவிகளை வகித்த எஸ். சந்திரமோகன், மலாய் நாளிதழான ‘உத்துசான் மலாயுவை’ தொடங்கிய சிங்கப்பூரின் முதல் அதிபர் யூசுப் இஷாக், சிங்கப்பூர் செய்தியாளர் மன்றத்தைத் தொடங்கிய அதே நேரத்தில் ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழில் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றிய சிங்கப்பூரின் நான்காம் அதிபர் வீ கிம் வீ, உத்துசான் மலாயுவின் துணை ஆசிரியரும் முன்னாள் அமைச்சருமான ஓத்மன் வோக், அன்றைய சிங்கப்பூர் ஒளிபரப்பு நிறுவனத்தின் மூத்த நிர்வாகத் தயாரிப்பாளர் திரு ரெமேஷ் குமார் உள்ளிட்ட காலஞ்சென்ற 14 ஊடக முன்னோடிகள் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
‘தி பிஸ்னஸ் டைம்ஸ்’ நாளிதழின் முன்னாள் செய்தியாளரும் ‘டுடே’ பத்திரிகையின் தலைமை ஆசிரியருமான கான்ராட் ராஜ், ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழின் விளையாட்டுச் செய்தி ஆசிரியர் காட்ஃப்ரீ ராபர்ட், ‘தி நியூ பேப்பர்’ நாளிதழின் முன்னாள் ஆசிரியரும் டுடே பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியரும் மீடியாகார்ப் பிரஸ்சின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான பி. என். பால்ஜி, அன்றைய ‘எஸ்பிசி’ தமிழ்த் தொலைக்காட்சிப் பிரிவின் முன்னாள் தலைமைத் தயாரிப்பாளரும் தலைவருமான வி. கலைச்செல்வன் ஆகியோர் வாழும் முன்னோடிகளாக ‘ஹால் ஆஃப் ஃபேமில்’ இடம்பெற்றுள்ள இந்தியர்களில் சிலர்.
ஊடகத்துறையில் 25 ஆண்டுகளுக்கும்மேல் பங்காற்றிய 50 முன்னோடிகளுடன் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து பல சாதனையாளர்களின் பெயர்களும் ‘ஹால் ஆஃப் ஃபேமில்’ இடம்பெறும் என்று கூறினார் சிங்கப்பூர் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் திரு பேட்ரிக் டேனியல்.
“ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பெற்றுள்ள 50 முன்னோடிகளை சிங்கப்பூர் ஊடகவியலாளர் மன்றத்தின் உறுப்பினர்களும் நண்பர்களும் வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுத்தனர்,” என்று அவர் கூறினார்.
“இந்த 50 முன்னோடிகளும் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற காலத்தில் ஊடகத்துறையில் பணிபுரிந்தவர்கள். அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையிலான பாலமாக ஊடகம் அமைந்ததை பார்த்தவர்கள் இவர்கள். நம்பிக்கையை வளர்க்கவும், புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தவும் ஊடகம் ஒரு கருவி. அதைப் புரிந்துகொண்டு தொண்டாற்றிய 50 முன்னோடிகளுக்கும் இந்த அங்கீகரிப்பு அவசியம்,” என்றார் வாழும் முன்னோடியாக ‘ஹால் ஆஃப் ஃபேமில்’ இடம்பெற்ற ‘பெரித்தா ஹரியான்’ மலாய் நாளிதழின் முன்னாள் செய்தி ஆசிரியரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சைனுல் அபிதீன் ரஷீத்.
தற்போது குவைத்துக்கான சிங்கப்பூர்த் தூதராக இவர் பணியாற்றுகிறார்.
“இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். இவர்களது பங்களிப்பு என்றென்றும் நினைவுகூர்ந்து போற்றத்தக்கது.
“சிங்கப்பூரின் தேசிய வரலாற்றையும் மக்களின் வாழ்வையும் பதிவு செய்வதில் இவர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர்,” என்று திரு பேட்ரிக் டேனியல் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூ, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரியும் சோகமான செய்தியைக் கூறி கண்ணீர்விடும் காட்சி, பதிவாகி, வரலாற்று நிகழ்வாக ஆகக் காரணமானவர் அன்றைய ‘எஸ்பிசி’ நடப்பு விவகாரப் பிரிவின் அமரர் எஸ்.சந்திரன். சிங்கப்பூரில் ஆக அதிக காலம் விளையாட்டுச் செய்தியாளராகத் தடம் பதித்தவர் திரு காட்ஃப்ரீ ராபர்ட்.
சிங்கப்பூர் ஊடகத்துறையில் புகழ்பெற்றவர்களின் பட்டியலில் தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியர்கள்