சாதிக்கப் பிறந்தவள் பெண் என்பதில் வியப்பில்லை. பெண் என்னும் பிறவியே சாதனைதான். பெண்ணின் வயிற்றிலிருந்து பிறக்கும் பெண்ணைச் சுற்றிப் பிறக்கும் பிரச்சினைகள் ஏராளம். கொடுமையின் கடுமை சகித்து, வட்டம் போட்ட கோட்டுக் குள் வாழ்ந்து தேயும் பெண்கள் என்பது பழைய வரலாறு. நம்பிக்கைக்குள் உயிரை ஊற வைத்து நாளையாவது விடியுமா என விழித்திருந்து பெண்கள் காத்திருந்ததும் ஒரு காலம். இப்போது, விழித்துக்கொண்ட பெண் கள் முன்னேற்றத் தடைகளை உடைக் கிறார்கள்; உயரம் தொட உழைக்கிறார்கள். எதிலும் முந்தவேண்டும் என்ற உந்துதல் இப்பெண்கள் பலரின் உடன்பிறப்பு.
வீட்டை முன்னேற்றி, நாட்டையும் பெருமைப்படுத்தும் பெண்கள் பலரைக் கொண்டது நம் சிங்கப்பூர் சமூகம். அவர்களைப் பற்றிய தொகுப்பு இது.
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு சங்கம் (சிண்டா) வாழ்க்கைத் திறன்களை இந்தியப் பெண்களுக்கு கற்பிக்கவும் நவீன சிங்கப்பூர் சமுதாயத்தில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 'நான் ஒரு பெண்' எனும் தலைப்பில் தொடர் பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
ஜூன் 4ஆம் தேதி தொடங்கிய பயிலரங்கு, மூன்று வாரயிறுதி
களுக்குத் தொடர்ந்தது. இவற்றில் 13 வயதிலிருந்து 25 வயதிற்கு உட்பட்ட சுமார் 50 சிங்கப்பூர் இந்திய மகளிர் கலந்துகொண்டனர்.
முதல் பயிலரங்கின் நோக்கம் பாலின நிலைப்பாடுகளை உடைப்ப தாக இருந்தது. அதன் தலைப்பு, 'நான் திறமையானவள்'.
ஆணுக்குப் பெண் எந்தவிதத்திலும் சளைத்தவரல்ல என்ற கருத்தையொட்டி அது நடத்தப்பட்டது.
ஆண் விளையாட்டுகள், பெண் விளையாட்டுகள் என பிரிப்பது அர்த்தமற்றது; நம் மனதிற்குப் பிடித்ததை நாம் செய்யவேண்டும் என்னும் கருத்தும் பயிலரங்கில் வலியுறுத்தப்பட்டது.
'நான் அச்சமற்றவள்' என்ற தலைப்பில் நடந்த 2ஆம் பயிலரங்கின் பங்கேற்பாளர்கள் உறவுகளுக்குள் ஆரோக்கியமான உரையாடல் இருக்கவேண்டியதன் அவசியத்தை கற்றுக்கொண்டனர்.
ஆண், பெண் உறவுக்கு அப்பாற்பட்டு, பெற்றோர் பிள்ளை உறவு, நட்பு போன்ற உறவுகளும் பேசப்பட வேண்டும். ஆரோக்கியமான உரையாடல் இல்லாத உறவு கசப்பாகிவிடும் என்பதையும் கற்றுக்கொண்டனர். நேற்று நிகழ்ந்த, 'நான் அழகானவள்" என்ற பயிலரங்குடன் இந்தத் தொடர் நிறைவுபெற்றது. பெண்கள் தங்களுடைய உடலைக் குறைகூறி விமர்சிக்கக் கூடாது என்பது இப்பயிலரங்கில் வலியுறுத்தப்பட்டது. இக்கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பங்கேற்பாளர்
களுக்கு இலவச மருதாணி சேவைகளோடு இயற்கை அழகு சாதனப் பொருள்களும் விநியோகிக்கப்பட்டன.
நன்யாங் பலதுறைத் தொழிற் கல்லூரி மாணவி தங்க அகல்யா தேவி, 20, பயிலரங்கில் பங்கேற்கும் முன் தன்னம்பிக்கை குறைவாக இருந்ததாகவும் சிண்டாவின் முயற்சியினால் இப்போது தம்மால் மற்றவர்கள் முன்னிலையில் தைரிய
மாகப் பேச முடிகிறது என்றும் கூறினார். ஆர்தி வெங்கடாசலத்துக்கு, 17, இது ஒரு சிந்திக்க வைக்கும் அனுபவமாக இருந்தது.
சமூகத்தில் ஒளிந்திருக்கும் பிரச்சினைகளை கலந்துரையாடல்ஆழமாக அலசியது என்றார் அவர்.
சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் பேசுகையில், "இந்தியப் பெண்கள் வீடு, பள்ளி, வேலை என பல்வேறு நிலை களிலும் சவால்களை எதிர்நோக்குகிறார்கள்.
"அவர்களுக்கு உத்வேகம் கொடுக்க பயிலரங்கு நடத்தப்படுகிறது. சவால்களை முறியடித்து வாழ்க்கையை மேம்படுத்துவது எவ்வாறு என்பதைக் கற்பிப்பதும் பயிலரங்கின் நோக்கம்," என்றார்.
சிண்டாவின் செயற்குழு உறுப்பினர் திருமதி ரதி பரிமளன், "மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரில் பெண்களுக்குப் பல வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
"அவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பெண்கள் முன்னேறவேண்டும்," என்றார். தேசிய குத்துச்சண்டை வீராங்கனை டனீஷா மதிவழகன், 25, பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் 'அவேர்' அமைப்பைச் சேர்ந்த சுகிதா நிதி, 58, 'TheCurveCult' நிறுவனத்தை நிறுவிய ராணி தாட்சாயிணி, 32, ஆகியோர் கேள்வி-பதில் அங்கத்தில் பங்கெடுத்தனர்.

