'இக்ஸ்னிடா சாபா' எனும் மலேசிய அரசு சாரா தொண்டு நிறுவனம் வழங்கிய 'தலைசிறந்த பெண் 2022' என்னும் விருதை வழங்கியது.
குடும்ப வன்முறை, வேலையின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கும் பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் சிங்கப்பூர் பெண்கள் மேம்பாட்டுக் குழுவை நிறுவிய முழுநேரத் தாதியான நோர்ஹாபிசா நிஜாம் முகமது, சமூக சேவையாளரும் சாஃப்ரான்ஸ் உணவகத்தின் நிறுவனருமான பீவி அயோப் ஆகிய இருவரும் விருது பெற்ற 42 மகளிர் பட்டியலில் அங்கம் வகித்தனர். சிங்கப்பூரைச் சேர்ந்த மொத்தம் 10 பேர் அந்த விருதைப் பெற்றனர்.
தன்முனைப்புப் பேச்சாளராக ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளின் மூலம் சமூக சேவைக்கு ஈர்க்கப்பட்ட நோர்ஹாபிசா, மகளிர் மேம்பாட்டுக்கென ஒரு குழுவை நிறுவவேண்டும் என்று எண்ணி 2014ஆம் ஆண்டில் அதைத் தொடங்கினார். இன்று 200க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் அதில் இருக்கிறார்கள்.
இனம், மொழி, சமய வேறுபாடு இன்றி, ஆதரவு தேவைப்படும் குடும் பங்களுக்குச் சமையல் பொருள்கள், பற்றுச்சீட்டுகள், ஒற்றை பெற்றோருடைய குழந்தைகளுக்கான பொருள்களை விநியோகிப்பதோடு பெண்கள் மனம் விட்டு பேச பாதுகாப்பான சூழலையும் இக்குழு ஏற்படுத்தித் தருகிறது.
மகளிர் மேம்பாட்டுக்கு ஆதரவு வழங்கி சேவை புரிந்துவரும் பீவி அயோப், தமது நான்கு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கக் கரடுமுரடான பாதையைத் தாண்டி வந்தவர்.
விருது பெற்றதில் பெருமிதம் கொள்ளும் இவர், கடந்த 26 ஆண்டு களாக உணவகத்தை நடத்தி வருகிறார்.
1994ஆம் ஆண்டு தெம்பனிஸில் சிறு கடையாகத் தொடங்கிய உணவகம், இன்று மூன்று கிளைகளாக விரிந்திருக்கிறது.
"நான்கு பிள்ளைகளைக் கரையேற்றக் காசு சேமிக்கத்தான் உணவகத்தைத் தொடங்கினேன். இன்று நால்வரும் பெரிய உத்தியோகங்களில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று அவர் சொன்னார்.
இம்மாதம் 4ஆம் தேதி மலேசி யாவில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
கொவிட்-19 கட்டுப்பாடுகளால் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் தங்களது விருதை இங்கு உள்ள ரெகேல் @ வாரன் கோல்ஃப் கன்ட்ரி கிளப் வளாகத்தில் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக 'இஆர்ஏ' நிறுவனத்தின் சிங்கப்பூர் பிரிவு இயக்குநர் இனா சுல்தானும் சிங்கப்பூர் மலாய் வர்த்தகத் தொழில் சபையின் அனைத்துலகப் பெண்கள் பிரிவின் சிறப்பு ஆலோசகர் ரோஸ்னா டின்னும் கலந்துகொண்டனர்.
செய்தி: அருணா கந்தசாமி

