ஓர் அரிய வகை நிமோனியா நோயால் 2012ஆம் ஆண்டு முதல் பாதிக்கப்பட்ட 51 வயது தீபா மௌரியா (படம்) தமது நுரை
யீரலை சோதனை செய்ய ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரைக் காணவேண்டி இருந்தது.
ஆனால், 2016 மே மாதம் அவரால் அச்சோதனைக்கு செல்ல
முடியவில்லை, நண்பர்களோடு ஒரு நாள் நடக்கச் சென்றபோது, திடீரென தடுக்கி கீழே விழுந்தது அதற்குக் காரணம். அடுத்த இரு மாதத்தில் தீபாவின் நுரையீரல் பரிசோதிக்கப்பட்டபோது அவருக்கு முதற்கட்ட நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. புற்று நோயை அறிந்து அதிர்ந்தாலும் துணிச்சலை வரவழைத்து உடனடியாக தம் இடது நுரையீரலில் இருந்த புற்றுநோய்க் கட்டியை அகற்ற அவர் ஏற்பாடு செய்தார்.
2017 ஏப்ரலில் தீபாவுக்குக் கடுமையான கால் வலி ஏற்பட்டதால் அவரால் சரியாக நடக்கமுடியவில்லை. கால் வலிக்கான காரணம் அறிய பரிசோதிக்கச் சென்றபோது மருத்துவர்களால் அதன் மூலகாரணத்தைக் கண்டுபிடித்து தீர்மானமாக எதையும் கூற முடிய வில்லை. குழப்பத்தில் தவித்துக்கொண்டிருந்த தீபா, மீண்டும் ஒரு பரிசோதனைக்குக் சென்றபோது அவருக்கு புற்றுநோய் மீண்டும் வந்துள்ளதாகவும் அது நான்காம் கட்டத்தில் இருப்பதாகவும் மருத்துவர் கூறினார்.
புற்றுநோய்க் கிருமி அவருடைய உடலெங்கும் பரவி, இடது காலின் எலும்பைத் தாக்கியதை உணர்ந்தபோது உலகமே இடிந்ததுபோல தீபா உணர்ந்தார்.
இடது காலில் இரண்டு உலோகக் கம்பிகளைப் பொறுத்தவேண்டிய கட்டாயம் இருந்ததோடு அவர் கீமோதெரபிக்கும் இம்மியூனோதெரபிக்கும் சென்றார். அதன் பிறகு குணமடையத் தொடங்கிய தீபாவுக்கு 2018 டிசம்பரில் இடது தோள்பட்டையில் பயங்கர வலி உண்டானது.
பல சோதனைகளுக்குப் பின் புற்றுநோய் அவரது இடது கையின் 'ஹியூமரஸ்' எலும்பைப் பாதித்தது. இதனால் கதிர்வீச்சு சிகிச்சைக்கு 2 மாதங்கள் தீபா சென்றார்.
2019, 2020 ஆம் ஆண்டுகளில் மூளையிலும் உடலின் வெவ்வேறு பகுதி
களிலும் புற்றுநோய் பரவியபோது வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இந்நோய் ஏற்
படுத்திய சிக்கல்களையும் சிரமங்களையும் அவர் முழுமையாக உணரத் தொடங்கினார்.
அதுமட்டுமல்லாமல் கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சைகள் உண்டாக்கிய பக்கவிளைவுகளைச் சமாளிக்க முடியாமல் அவர் திக்கு
முக்காடினார்.
கண் பார்வை, நுகரும் தன்மை, சுவை அறியும் உணர்வு ஆகியவற்றில் பிரச்சினைகளை எதிர்நோக்கிய தீபா, அவருடைய படுக்கை அறையில் தனியாக இருந்து தொலைக்காட்சிகூட பார்க்கமுடியாமல் இருக்க வேண்டிய நிலைமை அவரது மனதை மேலும் புண்படுத்தியது.
சென்ற ஆண்டு முதல், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எலும்புகளை வலு வாக்க ஊசி போட்டுக்கொள்கிறார் தீபா.
இடது கை முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர் அதை ஒரு பொருட்டாகக் கருதாமல் மன வலிமையோடுத் திகழ்கிறார்.
இந்த ஆண்டு நரம்புத் தூண்டி ஒன்று உடலில் பொருத்தப்பட்டதால் தீபாவின் கையிலிருந்த வலி மறைந்தது.
சிங்கப்பூரில் முதன்முறையாக புற்றுநோயாளி ஒருவருக்கு நரம்புத் தூண்டி பொருத்தப்பட்டது இவருக்குத்தான்.

