சிங்கப்பூரிலுள்ள 19 இந்திய முஸ்லிம் அமைப்புகளை ஒரே குடையின்கீழ் கொண்டுள்ள இந்திய முஸ்லிம் பேரவைக்குப் புதிய தலைவராக ரத்தினக்கல் வணிகர் சங்கத் தலைவர் அ. முகமது பிலால் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
கொளம் ஆயர் சிம்ஸ் விஸ்டா குடியிருப்பாளர் குழுவின் துணைத்தலைவரான திரு பிலால், கொளம் ஆயர் குடியிருப்பாளர் ஆலோசனைக் குழுவின் (சிசிசி) உதவிச் செயலாளராகவும் கேலாங் மேற்கு சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் துணைத்தலைவராகவும் சேவையாற்றுகிறார்.
முஸ்லிம் லீக் (சிங்கப்பூர்) சமூக நல்லிணக்கச் சேவை அமைப்பின் துணைத்தலைவர், தமிழர் பேரவை, ஜாமியா சிங்கப்பூர், ஜாமியா அறநிறுவன நல நிதியத்தின் உறுப்பினர் போன்ற பொறுப்புகளில் இவர் சமூக சேவையாற்றி வருகிறார்.
கடந்த மாதம் 20ஆம் தேதி டன்லப் ஸ்திரீட்டிலுள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் முஸ்லிம் பேரவையின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னைய தலைவர் முகமது கெளஸ் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் ஹபீப் தேர்தல் அதிகாரியாகவும் இந்திய முஸ்லிம் பேரவையின் ஆலோசகர்களான எம்.ஒய். முகமது ரஃபீக், நசீர்கனி ஆகியோர் உதவி தேர்தல் அதிகாரிகளாகவும் செயல்பட்டனர்.
புதிய தலைவர் பிலால், உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதோடு புத்தாக்கச் சிந்தனையுடன் இணக்கத்தோடு பேரவையை வழிநடத்த அனைவரின் பேராதரவு தொடர வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
தலைமைத்துவத்தை ஏற்ற பின்னர் இம்மாதம் 4ஆம் தேதி அடுத்த இரண்டு ஆண்டுக்கான நிர்வாகக் குழுவைத் திரு பிலால் அறிவித்தார்.
அதன்படி ராஜா முகமது துணைத் தலைவராகவும் உதவித் தலைவர்களாக முகமது ஜாஃபர், ஆதம் ஷாஹுல் ஹமீது, சையது அப்துல் ரஹீம் ஆகியோரும் பொறுப்பு வகிப்பர்.
பொதுச் செயலாளராக முனைவர் முஹைதீன் நிசார் அன்வர், துணைச் செயலாளராக ஹுசைன் பாதுஷா, உதவிச் செயலாளராக அப்துல் மாலிக் ஆகியோர் பதவி ஏற்றனர். பொருளாளராக முகமது அஸீம், உதவிப் பொருளாளராக நசீர் முகமது ஆகியோரும் உள் கணக்கு தணிக்கையாளராக யூசுப் ஷாவும் பொறுப்பேற்றனர்.
செய்தி, படம்:
இந்திய முஸ்லிம் பேரவை

