பொன்மணி உதயகுமார்
மறுசுழற்சிப் பொருள்களைக் கொண்டு பூச்சி வகைகளின் மாதிரியைத் தனது தோட்டத்தில் வடிவமைத்துள்ளார் பசுமை வனப்புத் துறையைச் சேர்ந்த பி. குருமூர்த்தி.
தேசிய பூங்காக் கழகத்தின் சிங்கப்பூர் தோட்டக்கலை விழாவை ஒட்டிய 'ஷோ கார்டன்' போட்டியில் இந்தத் தோட்டம் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
இதனை உருவாக்க இரண்டு மாத காலம் பிடித்ததாக அவர் கூறினார். உலகப் பேரழிவுக்குப் பின்னர் இயற்கை வளம் பெருகி, பூச்சி இனம் மனிதர்களைவிடப் பெரிதாக வளர்ந்தது போன்ற கற்பனையில் இந்தத் தோட்டத்தை இவர் வடிவமைத்துள்ளார்.
1970களிலிருந்து 1990 வரை காணப்பட்ட பேருந்து நிறுத்தங்களை நினைவூட்டும் வகையில் அன்றைய பேருந்து நிலையக் கூரையையும் தன் தோட்டத்தில் சேர்த்துள்ளார்.
போட்டியில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் ஜென்கின்சின் தோட்டமும் சிங்கப்பூரைச் சேர்ந்த இலியம் எங், ஆன்டி எங் இணைந்து வடிவமைத்த தோட்டமும் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றன.
'கம்யூனிட்டி கார்டன் எடிபல்ஸ்', மலர் வடிவமைப்பு போன்ற மேலும் சில போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குருமூர்த்தி, ஏற்கெனவே மூன்று முறை தோட்டக்கலை விழாவின்போது தோட்ட வடிவமைப்பைச் செயல்படுத்தும் குழுவில் இருந்துள்ளார். முதன்முறையாக தோட்ட வடிவமைப்பாளர் இல்லாமல் சுயமாக இப்போட்டியில் பங்கேற்றதாக அவர் கூறினார்.
இத்தகைய விழாக்கள் தேசிய வளர்ச்சிக்கும் தோட்டக்கலைத் துறையின் தொடர் வளர்ச்சிக்கும் பங்களிப்பதாக அவர் கருதுகிறார்.
நேற்று முதல், ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வரை அயோன் ஆர்ச்சர்ட், நீ ஆன் சிவிக் பிளாசா, சிங்கப்பூர் பூமலை, மரினா பே சேண்ட்சில் நடைபெறும் தோட்டக் கலை விழா தொடர்பான நிகழ்ச்சிகளைப் பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம்.
தேசிய அளவில் பரவி இருக்கும் தோட்டக்கலை ஆர்வத்தைக் கொண்டாடவும் அதை வளர்க்கவும் 2006ல் தொடங்கிய சிங்கப்பூர் தோட்டக்கலை விழாவை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்துவதில் மகிழ்ச்சி கொள்வதாக விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.
ஒரே இடத்தில் நடைபெறாமல், சிங்கப்பூர் பூமலை, ஆர்ச்சர்ட் சாலை என இரண்டு இடங்களில் இந்த விழா நடைபெறுவது இந்த ஆண்டின் சிறப்பு என்பதைத் துணைப் பிரதமர் ஹெங் சுட்டினார். நிகழ்ச்சியில், தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயும் கலந்துகொண்டார் .
ஈராண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இவ்விழா 2020ல் கொவிட்-19 கிருமிப்பரவலை முன்னிட்டு ரத்து செய்யப்பட்டது. அவ்வேளையில், சிங்கப்பூரில் பலர் தோட்டக்கலையிலும் பசுமை வெளிகள் மீதும் ஆர்வம் செலுத்தத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு வாரத்தில் ஒன்றிலிருந்து நான்கு மணி நேரம் வரை தோட்டக்கலையில் ஈடுபடுவோரின் மீள்திறன் மற்றவர்களைவிட சிறந்து இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளதாகத் துணைப் பிரதமர் பகிர்ந்து கொண்டார்.
தேசிய பூங்காக் கழகத்தின் 'கம்யூனிட்டி இன் புளூம்', 'ஸ்கைரைஸ் இன் கிரீனரி' திட்டங்களின் இயக்குநரான கே. பூங்கோதை, இவ்வாண்டு விழாவில் 40 சமூகக் குழுக்கள் பங்கேற்றதாகத் தெரிவித்தார்.
மக்களை தோட்டக்கலையில் ஈடுபட ஊக்குவிப்பதே 'கம்யூனிட்டி இன் புளூம்' திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தில் வயது, பாலின வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்று வருவதாக பூங்கோதை கூறினார். இதன்கீழ் 45,000 தோட்டக்கலை ஆர்வலர்கள் இயங்கி வருவதாகவும் ஆர்வம் கொள்ளும் அனைவருக்கும் வழிகாட்ட இத்திட்டம் உதவுமென்றும் அவர் கூறினார். 2005ல் தொடங்கிய இத்திட்டத்தின் மூலம் சிங்கப்பூரில் 1,800 சமூக தோட்டங்கள் உருவாகிஉள்ளன. இவற்றில் பாதி சமூகத் தோட்டங்கள் பள்ளி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

