சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் கவியரசு கண்ணதாசன் விழா, வரும் நவம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதை முன்னிட்டு, 25 ஆண்டு களுக்கு மேலாகச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியவரும் மறைந்த அதன் முன்னாள் தலைவருமான சுப. அருணாசலம் (படம்) நினைவாக, சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவரது குடும்பத்தினரின் நிதியாதரவுடன் இந்தப் போட்டி நடைபெறும்.
போட்டிக்கான விதிகள்:
சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திப் பாடல் வரிகளை எழுத வேண்டும். பாடல் சிங்கப்பூர்ச் சூழலில் ஒருவர் பாடுவதாக அமைந்திருக்க வேண்டும்.
பாடலில் ஒரு பல்லவி, நான்கு சரணங்கள் இருக்க வேண்டும். ஒவ்வொன்றும் நான்கு வரிகளில் மொத்தம் 20 வரிகள் மட்டுமே இருக்க வேண்டும்.
ஒருவர் அதிகபட்சமாக மூன்று பாடல்கள்வரை அனுப்பலாம்.
சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம்.
எழுத்தாளர் கழகச் செயற்குழு உறுப்பினர்கள் 11 பேரும் போட்டியில் பங்கேற்க முடியாது. மற்ற உறுப்பினர்கள் பங்கேற்கலாம்.
போட்டி குறித்த நடுவர்களின் முடிவே இறுதியானது.
http://singaporetamilwriters.com/suba எனும் இணைய முகவரியில் காணப்படும் கூகல் படிவத்தை நிரப்பி, பாடல்களுடன் அனுப்ப வேண்டிய இறுதி நாள் 30.09.2022.
போட்டியில் முதல் பரிசாக $300, இரண்டாம் பரிசு $250, மூன்றாம் பரிசு $150 வழங்கப்படும். முதல் பரிசு பெறும் பாடல் இசையமைக்கப்பட்டு கண்ணதாசன் விழாவில் ஒலிபரப்பப்படும்.