மாதங்கி இளங்கோவன்
அழகிய கதக் நடனமணியின் மீது ஒரு கவிஞன் கொண்டுள்ள காதலை வருணிக்கிறது உள்ளூர்க் கலைஞர் ஷபிரின் புதிய பாடலான 'ருபையத் கவிதை'.
நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட இப்பாடல், 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமினுடைய கவிதைத் தொகுப்பின் சில அம்சங்களையும் கவிநயத்தையும் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
நவீன சிந்தனைகளை சூஃபி ஆன்மீகத்தோடு கலந்து படைக்கும் உமர் கய்யாம், நான்கு வரிகளைக் கொண்ட பத்திகளில் 'ருபையத்' பாடல்களை வடிப்பார். அதே வடிவில் 'ருபையத் கவிதை' பாடலை எழுத முயன்றுள்ளார் ஷபிர்.
சிறந்த ஒலிப்பதிவு, ஒலி வடிவம் போன்ற அம்சங்கள் நிச்சயம் இப்பாடலில் இருக்க வேண்டுமென்ற குறிக்கோள் ஷபிர் குழுவினருக்கு இருந்ததால் இதனை உருவாக்க ஈராண்டு எடுத்துக்கொண்டனர்.
உமர் கய்யாமின் 'ருபையத்' கவிதைகள், வாழ்க்கை, மரணம், காதல், சமயம் போன்ற வாழ்க்கையின் முக்கிய அங்கங்களைப் பற்றிய தத்துவங்களை எடுத்துச் சொல்பவை. "சூஃபி தத்துவங்களும் இசையும் எனது வாழ்க்கையையும் பாடல்களையும் ஒரு விதத்தில் பாதித்துள்ளன," என்று சொல்லும் ஷபிர், "சூஃபி தத்துவக் கவிதைகள் மட்டுமல்லாமல் திருக்குறள், குறுந்தொகை போன்ற தத்துவம் நிறைந்த படைப்புகளின் தாக்கத்தையும் என் பாடல்களில் நிறையவே பார்க்கலாம்," என்று கூறுகிறார்.
காதலுக்கு வரையறை ஏதுமில்லை என்பதை வெளிக்கொணரும் 'ருபையத் கவிதை', இசைக்கும் எல்லைகளில்லை என்பதைப் பறைசாற்றுகின்றது. இந்தியப் பாரம்பரிய இசையோடு 'இடிஎம்' எனும் நாட்டிய இசையைக் கலந்து ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தருகிறார் ஷபிர்.
இந்தப் பாடலின் துணை இசையமைப்பாளரான புவனேஸ்வரன், 10 ஆண்டுகளாக ஷபிரிடம் இசை தயாரிப்பு குறித்துக் கற்றுகொண்டவர். ஷபிரோடு இணைந்து சில பாடல்களுக்கு இசையும் அமைத்துள்ளார் இவர்.
ஷபிரின் 'யூடியூப்' பக்கத்தில் 'ருபையத் கவிதையின்' உயிரோவியக் காணொளி நாளை வெளியாகவுள்ளது. இதில் கவிஞனாகக் காணப்படும் ஷபிர், கதக் நடனமணியின் நடன அசைவுகளில் மயங்கும்போது உமர் கய்யாமின் கவிதை வரிகளைப் புரிந்துகொள்கிறார். 'டூடல்ரெப்ஸ்' அமைப்பும் காணொளித் தொகுப்பாளர் ரஞ்சித்தும் இந்தக் காணொளியைத் தயாரித்துள்ளனர்.