சென்ற ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணியளவில், உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் எழுத்தாளர் மா. அன்பழகனின் நான்கு நூல்கள் வெளியீடு கண்டன.
கவிமாலை அமைப்பின் ஏற்பாட்டில், 'மேகம் மேயும் வீதிகள்' எனும் கவிதைத் தொகுப்பு, 'டுரியானுள் பலாச்சுளை' எனும் சிறுகதைத் தொகுப்பு, 'கூவி அழைக்குது காகம்-பாகம் 4' எனும் மாணவர் கடித இலக்கியம், 'ஐம்பதிலும் வாழ்க்கை வரும்' எனும் தன்முனைப்புக் கட்டுரைகளின் தொகுப்பு ஆகியவை அந்நூல்கள்.
'புரோப்நெக்ஸ்' சொத்து முகவர் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி முகமது இஸ்மாயில் கஃபூர் நூல்களை வெளியிட்டார். தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளரும், இலக்கியச் சொற்பொழிவாளருமான பழ. கருப்பையா, "நூல்களை ஏன் படைக்கவேண்டும்? ஏன் படிக்கவேண்டும்?" எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவப்படையில் பணியாற்றிய பெருமைக்குரிய கவிஞர் வை. சுதர்மனின் 95வது பிறந்தநாளை ஒட்டி நூலாசிரியர் மா. அன்பழகன் தனது நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சுதர்மன் தம்பதியை மேடைக்கு அழைத்து மரியாதை செய்தார்.