சிறுவயதிலிருந்து கர்நாடக இசை பயின்றும் நாட்டுப்புற கதைகள் கேட்டும் வளர்ந்த 22 வயது அர்ச்சனா தினகர் பாலாவிற்கு (படம்) வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தில், குறிப்பாக தெற்காசியப் பகுதி மீது அதீத ஆர்வம்.
அதற்கேற்ப அவர் தன் படிப்பிலும் இணைப்பாட நடவடிக்கைகளிலும் தெற்காசிய நாடுகளின் பொருளியல் மீது தொடர்ந்து கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்.
இதைக் கண்டறிந்த சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகக் கல்விமான் திட்டம், முதல்முறையாக வழங்கப்படும் சையத் அஹ்மத் கான் ஏ.எம்.யூ. நினைவுப் பரிசை அர்ச்சனாவுக்கு வழங்கியிருக்கிறது.
தெற்காசியக் கற்றலுக்கும் கலாசாரத்துக்கும் பங்களிக்கும், இரண்டு மாணவர்களுக்கு இவ்வாண்டு முதல் இந்தப் பரிசு வழங்கப்படும். இந்தியாவின் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஆதரவில் இது வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு பல்கலைக்கழகக் கல்விமான் திட்டத்தின் சிறந்த மாணவருக்கான விருதையும் ஜோவானா வோங் பதக்கத்தையும் அர்ச்சனா வென்றுள்ளார்.
இவ்விருதுகளையும் பரிசுகளையும் பெற வேண்டும் என்ற முனைப்போடு தான் எதையும் செய்யவில்லை என்ற அர்ச்சனா இவற்றைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி கொண்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் பயின்றபோது 'கொன்ஜங்ட் கன்சல்டிங்' நிறுவனத்துடன் இணைந்து பல சமூகநல அமைப்புகள் மூலம் தொண்டூழியம் புரிந்துள்ளார் அர்ச்சனா. குறிப்பாக வெளிநாட்டு ஊழியர்களுக்கான திட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். கிருமிப்பரவல் சூழலின்போது அவர்கள் பெரும் அவதிக்கு ஆளானதை எண்ணி வருத்தம் அடைந்ததாகவும் சிங்கப்பூரின் மேம்பாட்டுக்கு வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு மிக அவசியம் என்று நம்புவதாகவும் இவர் கூறினார். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளைப் பேசக் கூடிய அர்ச்சனா, தனது தொண்டூழிய நடவடிக்கைகள் மூலம் கடமை உணர்வு, உறுதி, நேரந்தவறாமை, மீள்திறன் போன்றவற்றின் அவசியத்தை அறிந்து கொண்டதாகக் கூறினார்.
இணைப்பாட நடவடிக்கைகளால் பட்டப் படிப்பில் கவனம் சிதறிவிடக்கூடாது என்ற தீர்மானத்துடன் இருந்த அர்ச்சனாவிற்கு நண்பர்களின் ஆதரவு மிகவும் உதவியது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளராகத் தற்போது பணிபுரியும் இவர் முனைவர் பட்டம் பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து தெற்காசிய நாடுகளின் பொருளாதாரத் துறையில் கவனம் செலுத்தவும் தன்னால் முடிந்த பங்களிப்பைத் தெற்காசியச் சமூகங்களுக்கு அளிக்கவும் அர்ச்சனா விரும்புகிறார்.
செய்தி: பொன்மணி உதயகுமார்

