திவ்யாதாக்ஷாய்னி
முழுமையான மனிதர்களை உருவாக்குவதற்குக் கலை அவசியம் என்கிறார் தேசியக் கலை மன்றத்தின் கலை உபகாரச் சம்பளம் பெற்ற ஐஸ்வர்யா ஷண்முகநாதன் (படம்).
கலைகளில் தீவிர நாட்டம் கொண்ட இவர், சிங்கப்பூர் நாடகக் கல்வியாளர் சங்கத்தின் தலைவர். இம்மாதம் 16ஆம் தேதி, வெவ்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்த எட்டு தலைசிறந்த கல்விமான்களுக்கு, மன்றம் இந்த உபகாரச் சம்பளத்தை வழங்கியது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங், சமூகத்தின் பங்களிப்போடு அரசாங்கம், கலைக்கும் மரபுடைமைக்கும் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றார்.
தேசியக் கல்விக் கழகத்தில், கல்வியில் முனைவர் பட்டப் படிப்பில் பயிலும் ஐஸ்வர்யா, "15ஆண்டுகளுக்கு முன் நான் நாடக ஆசிரியராகப் பணிபுரிந்தபோது, அது ஒரு தொழிலாகக்கூட அங்கீகரிக்கப்படவில்லை. நாடகம் வெறும் வளமூட்டும் நடவடிக்கையாகவும் பொழுதுபோக்கு அம்சமாகவும் கருதப்பட்டதே தவிர கல்வியின் ஓர் அம்சமாகக் கருதப்படவில்லை," என்று கூறினார்.
இந்த உபகாரச் சம்பளம், நாடக ஆசிரியர் துறையை அங்கீகரிக்கும் விதத்தில் உள்ளதாகவும் தன்னை ஊக்குவிப்பதாகவும் ஐஸ்வர்யா கூறினார்.
நாடக ஆசிரியரும் பயிற்றுவிப்பாளருமான இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக சமூகம், பள்ளி ஆகியவை சார்ந்த கலைத்திட்டங்களில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டுவருகிறார். தனது வளர்ச்சிக்கு கலைத்துறையில் பெற்ற தொடக்க அனுபவமும் பங்கேற்பும் முக்கியக் காரணங்கள் என்றார் இவர்.
தேசிய பாடத்திட்டத்தில் கலைகளுக்கு ஒரு குறிப்பிடத் தகுந்த இடம் கிடைக்க வேண்டும் என்பது ஐஸ்வர்யாவின் விருப்பம். இன்னும் பல கலைஞர்களை என்றில்லாமல் முழுமையான மனிதர்களை உருவாக்க இது அவசியம் என்றார். கலைத்துறைப் படிப்பில் ஆர்வம் உள்ள இளையர்கள் துணிந்து இந்தப் பாதையில் செல்ல அவர் ஊக்குவித்தார்.