துணிச்சலுடன் பணியிடை மாற்றம் செய்து தன்னம்பிக்கையுடன் புதிய தொழிலில் தனிமுத்திரை பதித்துவரும் முன்மாதிரி இளையர்
திவ்யா தாக்ஷாய்னி
சிறு வயதில் சமையல் அறையை எட்டிக்கூடப் பார்த்திராத ஜெய் கணேஷ், 33, தற்போது எண் 56, டிராஸ் ஸ்திரீட்டில் அமைந்துள்ள ரிவால்வர் நவீன இந்திய உணவகத்தில் சமையல் கலைஞராகப் பணிபுரிகிறார்.
ராணுவத்தில் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் பணிபுரிந்த இவருக்கு சமையல் கலைமீதான அலாதி விருப்பமும் ஆர்வமும் பணியிடை மாற்றத்துக்கு உந்துதல்களாய் இருந்தன. கடந்த ஈராண்டுகளாக கணேஷ் இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பட்டக்கல்வி படிக்கச் சென்றபோது, தினமும் கடையில் சாப்பிடுவது கட்டுப்படியாகாது என்பதால் சமைத்துச் சாப்பிட முடிவெடுத்தார் கணேஷ்.
'மேகி' போன்ற உடனடியாகத் தயாரிக்கக்கூடிய உணவுவகைகளை மட்டுமே சமைக்கத் தெரிந்திருந்த கணேஷிற்கு இணையம் உதவியது. தாயாருடன் இணையக் காணொளி அழைப்பில் தொடர்புகொண்டு உணவு செய்முறைகளைக் கற்றுக்கொண்டார்.
முதல்முறையாக சமைத்த இறைச்சிக் கறி ருசியாக இல்லாவிட்டாலும் அது கணேஷிற்கு சமையல்மேல் உள்ள ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. சமையல் திறன்களை வளர்த்துக்கொண்டு உறவினர்கள் நண்பர்கள் என்று பலருக்கும் சமைத்துத் தந்தார்.
நிலையான ராணுவ வேலை, நல்ல ஊதியம் ஆகியவற்றைக் கைவிட்டு சமையல் துறையில் சேர கணேஷ் தன் விருப்பத்தைத் தெரிவித்தபோது பெற்றோர் சற்று தயக்கம் காட்டினர்.
எனினும், யோசிக்காமல் கணேஷ் இந்த முடிவை எடுத்திருக்கமாட்டார் என்பதால் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.
ஒரு நாளில் கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்குமேல் வேலை செய்யும் கணேஷ் பெரும்பாலான நேரம் வீட்டில் இருப்பதில்லை.
இருந்தாலும் இவரின் மனைவி இந்தத் துறையில் தன் கணவர் சிறந்து விளங்கவேண்டும் என்ற விருப்பத்தில் ஊக்கம் கொடுத்து பெரும் ஆதரவாக இருக்கிறார்.
நல்ல தலைமைத்துவம் முக்கியம் என்று நம்பும் கணேஷ், சமையல் கலைஞர்கள் ராபின் விங், சௌரப் உடினியா, ஃபரிஸ் ராம்லி ஆகியோரைத் தனது முன்மாதிரிகளாகக் கருதுகிறார்.
எளிமையான குடும்பத்தில் வளர்ந்த காற்பந்தாட்ட வீரர் கிறி ஸ்டியானோ ரொனால்டோவின் மனப்பான்மை, இலக்குகளை நோக்கிய கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகிய பண்புகளை ரசிக்கும் கணேஷ் தானும் அவரைப்போல் உழைத்து இலக்கை எட்ட வேண்டும் என்று ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய உணவை சமைத்துப் பார்க்கிறார்.
இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஒரு நவீன, மேற்கத்திய இந்திய உணவகத்தின் உரிமையாளராக வேண்டும் என்பது இவரின் கனவு.
இந்திய உணவைச் சமைப்பதில் கைதேர்ந்த பிறகு பிரெஞ்சு உணவு வகைகளையும் கடந்த ஓராண்டாக சமைத்துவருகிறார் கணேஷ். தான் சமைத்த உணவை மற்றவர்கள் மகிழ்ச்சியாக ருசித்துச் சாப்பிடுவது மன நிறைவைத் தருவதாகக் கூறினார் கணேஷ்.
மாஸ்டர் செஃப் போட்டி அனுபவம்
மாஸ்டர் செஃப் சமையல் போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டபோது கணேஷின் பெற்றோர், நண்பர்கள் எனப் பலரும் அவரை பங்கேற்கச் சொல்லி வலியுறுத்தினர்.
முதலில் தயங்கிய கணேஷ் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாளில் இறுதி நிமிடத்தில் போட்டிக்குப் பெயரைப் பதிந்துகொண்டதாகக் கூறினார்.
இந்தப் போட்டியில் இரண்டு தருணங்கள் மறக்கமுடியாதவை என்றார் அவர். ஃபுல்லர்ட்டன் ஹோட்டலில் நடைபெற்ற குழுப் போட்டியில், ஒரு குழு மேற்கத்திய உணவு வகைகளையும் இன்னொரு குழு ஆசிய உணவு வகைகளையும் கொடுக்கப்பட குறுகிய நேரத்தில் தயாரிக்க வேண்டும்.
ஆசிய உணவு வகையைத் தயாரித்த கணேஷின் குழு, எதிரணியை வீழ்த்த முடியாது என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது தன்னால் மறக்கமுடியாத தருணம் என்றார் கணேஷ்.
மற்றொரு தருணத்தில், இனிப்புப் பண்டங்கள் செய்வதில் அதிகம் அனுபவம் இல்லாத நிலையில், தான் செய்த இனிப்புப் பண்டத்தை ருசித்த போட்டி நடுவர் மிகவும் பாராட்டியதைப் பகிர்ந்துகொண்டார் கணேஷ்.
வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அனுபவமாக மாஸ்டர் செஃப் போட்டி கணேஷுக்கு அமைந்தது.
பல புதிய நண்பர்களையும் வாய்ப்புகளையும் அங்கீகாரத்தையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.
உணவு 'பாப் ஆப்' நிகழ்ச்சி
தங்கள் சமையல் திறன்களை வெளிப்படுத்துவதற்கு சமையல் வல்லுநர்கள் பலரும் 'பாப் ஆப்' நிகழ்ச்சி நடத்துவர்.
அந்த வகையில், கடந்த ஜனவரி 17 முதல் 19ஆம் தேதி வரை, கணேஷும் ராபின் விங்கும் இணைந்து 16 வகையான இந்திய உணவு வகைகளை நவீன பாணியில் படைத்திருந்தனர்.
செட்டிநாடு இறால் தோசை டாக்கோ, நண்டு பிரியாணி, 'லோப்ஸ்டெர்' எனப்படும் இறால் ரசம் என கண்களுக்கும் வயிற்றுக்கும் விருந்தளிக்கும் விதத்தில் இருந்தது இவர்களது உணவுப் பட்டியல்.