தேசிய சேவையின்போது வார இறுதி நாள்களைப் பயனுள்ள முறையில் செலவிட எண்ணி, தொடக்கக்கல்லூரி நண்பர்களோடு சேர்ந்து வணிகத்தில் இறங்கினார் இளையர் பிரணவ் கிருஷ்ண பிரசாத் (படம்).
சென்ற ஆண்டு மத்தியில் 'பைலெஃப்ட்' எனும் அலுவலக வசதிச் சேவையைத் தொடங்கினார். சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அவற்றின் அலுவலக இடத்தையும் வளங்களையும் பயன்படுத்தாத நேரங்களில், தேவைப்படும் நிறுவனங்கள் அவற்றைக் குறைந்த செலவில் பயன்படுத்த உதவுகிறது இச்சேவை. இதனால் இருதரப்பினரும் செலவைக் குறைத்து பயன்பெற முடிகிறது.
சேவையைப் பயன்படுத்த தளவாடக் கட்டணம் விதிப்பதன் மூலம், பிரணவும் குழுவினரும் லாபம் ஈட்டுகிறார்கள்.
மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் நண்பனின் வணிகத்துக்கும் உதவுகிறார் பிரணவ்.
இவரது 'பைலெஃப்ட்' நிறுவனத்திற்கு மனிதவளப் பற்றாக்குறை ஒரு சவாலாக இருக்கின்றது. வர்த்தக ஆலோசகராகப் பணியாற்றும் பிரணவின் தந்தை, இவருக்குத் தொழில் சார்ந்த ஐயங்களைத் தீர்த்து வைக்கிறார்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு வணிகம் பயிலும் பிரணவ், படிப்போடு தொழிலிலும் கவனம் செலுத்தும் இளையர்களுக்கு ஒரு முன்மாதிரி என்றால் மிகையில்லை.
'பைலெஃப்ட்' சேவையை, அடுத்த ஆண்டுக்குள் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் ஆறு ஆண்டுகளுக்குள் உலகம் முழுவதும் விரிவுபடுத்துவது இவரது இலக்கு.
செய்தி: அனுஷா செல்வமணி

