ஆ. விஷ்ணு வர்தினி
எலிசபெத் அரசியாருடன் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு கடிதத் தொடர்பில் இருந்துள்ளார் திரு அ. கண்ணன். கடிதம் எழுதத் தொடங்கியபோது பதில் வரும் என அவர் எதிர்பார்க்கவில்லை. அரசியாருடன் தொடர்புகொண்டதை அணுக்கமான அனுபவமாகக் கருதுகிறார் பொதுப்பணித்துறை ஊழியரான இவர்.
உயர்நிலைப் பள்ளிக் காலத்தில் இருந்தே இங்கிலாந்தின் அரச குடும்பத்தினரைப் பற்றிய செய்திகளை வாசித்து வந்தார் கண்ணன். 2017ல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சில் வெளிவந்த ஒரு செய்தி மூலம், கடிதம் எழுதுவோருக்கு அரச குடும்பத்தினர் பதிலளித்ததைத் தெரிந்துகொண்டார்.
சோதனை முயற்சியாக கடிதம் எழுதிய அவருக்கு, இன்ப அதிர்ச்சியாக ஓரிரு மாதம் கழித்து பதில் வந்தது. தனிப்பட்ட உதவியாளர், அரசியாரின் வாழ்த்துகளை அதில் தெரிவித்திருந்தார். ஒவ்வோர் ஆண்டும் அரசியாருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தட்டை அனுப்புவது அப்போதிலிருந்து கண்ணனின் வழக்கமானது. அரசியாரின் மாளிகையிலிருந்து வரும் பதில்கள் ஒவ்வொன்றும் தனிப்பட்டதாக இருந்ததைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைந்தார். முதலில் கண்ணனை நம்பாத அவரது நண்பர்கள், பின்னர் தாங்களே கடிதம் எழுதி பதில்கள் பெற்றபோது வியந்துபோயினர்.
"அரசியாரின் மறைவு அதிர்ச்சியாகவும் சோகமாகவும் உள்ளது. இனி அவருக்குக் கடிதம் எழுத முடியாது என்பதில் வருத்தமே. ஆயினும், தொடர்ந்து அரச குடும்பத்தினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அனுப்புவேன்," என்றார் 57 வயது கண்ணன். முன்னரும் இளவரசர்களுக்கு அவர் கடிதம் எழுதி பதில் பெற்றது உண்டு.