பொன்மணி உதயகுமார்
டுரியான் பழத்தை சிங்கப்பூரில் பல இனத்தவரும் விரும்பி உண்டாலும், இதனை அதிகம் விரும்பி உண்பவர்கள் சீனர்கள். அந்த வகையில் இதன் வர்த்தகத்தில் அதிகம் ஈடுபட்டிருப்பவர்களும் அவர்கள்தான். வழக்கத்திற்கு மாறாக டுரியான் வர்த்தகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கால் பதித்தார் அவினாஷ் மகேந்திரம்.
சிறுவயதிலிருந்து இவர் ஒரு டுரியான் பிரியர். தேசிய சேவையின்போது சந்தித்த நண்பர் கெல்வின் டான் டுரியான் வியாபாரத்தை நிர்வகிக்க அழைத்தபோது, சற்றும் தயங்காமல் ஒப்புக்கொண்டார் அவினாஷ். இந்தத் தொழிலில் சீனர்களின் ஆதிக்கமோ மொழியினால் வரக்கூடிய தடங்கல்களோ இவருக்குப் பெரிய சவாலாகத் தோன்றவில்லை.
'99 ஓல்ட் ட்ரீஸ்' என்பது இவர்களது நிறுவனத்தின் பெயர். மலேசியத் தோட்டத்தில் 99 டுரியான் மரங்கள் இருப்பதால் இந்தப் பெயர் சூட்டியதாகக் கூறினார் அவினாஷ்.
அதிகாலை ஐந்து மணிக்கு மலேசியத் தோட்டத்தில் பறிக்கும் பழங்களைத் தரம் சோதித்த பிறகு இங்கு லாரியில் கொண்டுவந்து இரவிற்குள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறது இந்நிறுவனம்,
தற்போது ஊட்ரம் ரயில் நிலையத்திற்கு அருகே 'ஸ்திங்க்கீஸ்' எனும் உணவுப் பண்டம் விற்கும் கடையையும் திறந்துள்ளனர். இதில் டுரியான் பழம்கொண்டு தயாரிக்கப்பட்ட பலகாரங்களும் குளிர்பானங்களும் விற்கப்படுகின்றன.
பழத்தை உண்ணாதவர்களும் இவற்றை விரும்புகிறார்கள் என்றும் சுற்றுப்பயணிகளும் இவற்றை சுவைபார்க்க இங்கு வருவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார் அவினாஷ்.
தரத்துக்கு முக்கியத்துவம் தரும் இவரது நிறுவனம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற, தரமான பழங்கள் கிடைக்காத நேரங்களில் விநியோகத்தை நிறுத்தியதும் உண்டு.
விற்காமல் மீந்துபோகும் பழங்களை வீணாக்காமல் பலகாரங்கள் தயாரிப்பதில் நிறுவனம் ஈடுபட்டிருப்பதாகக் கூறினார் அவினாஷ். மேலும், பழத்தின் தோல், கொட்டைகள் போன்றவற்றை அரைத்து உரமாக மாற்றுவது குறித்து தேசிய பூங்காக் கழகத்துடன் பேச்சு நடத்துவதாகக் கூறினார். மலேசியாவிலிருந்து பழங்களைக் கொண்டுவரும் வாகனங்களில் உரத்தைத் திருப்பி அனுப்பிவைக்கவும் இவர் திட்டமிடுகிறார்.

