மாதங்கி இளங்கோவன்
'ஐடிஇ காலேஜ் சென்ட்ரலில்' நிகழ்ச்சி மேலாண்மைத் துறையில் பயில்கிறார் 18 வயது சிரஞ்சீவி இளஞ்சேரன். 'எஃப்1' இரவுநேர கார் பந்தயத்தில் தொண்டூழியம் செய்யும் 900க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கல்விக்கழக மாணவர்களில் இவரும் ஒருவர்.
இரண்டு மாதங்களாக சக மாணவர்களோடு இவ்வாண்டின் 'எஃப்1' பந்தய ஏற்பாடுகளில் பங்கெடுக்கும் இவர், பார்வையாளர் பகுதியில் வழிகாட்டியாகத் தொண்டூழியம் செய்கிறார். 'எஃப்1' ரசிகர்களின் நுழைவுச்சீட்டுகளைச் சரிபார்ப்பதும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர வழிகாட்டுவதும் இவருடைய பணிகளில் சில.
சக மாணவர்களோடு சேர்ந்து தொண்டூழியம் செய்வது உற்சாகம் தருவதாகவும் இதனால் தங்கள் நட்பு வலுவடைந்திருப்பதாகவும் கூறினார் சிரஞ்சீவி.
கூட்டத்தை எவ்வாறு சமாளிப்பது, தடங்கல் ஏற்பட்டாலும் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்த எம்மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பன போன்ற அத்தியாவசிய அம்சங்களை இத்தொண்டூழிய அனுபவம் கற்றுக்கொடுத்ததாக இவர் கூறினார்.
தொழில்நுட்பக் கல்விக் கழகங்களின் நிகழ்ச்சி மேலாண்மைத் துறை, சுற்றுலாப் பயணத்துறை, வர்த்தகத் துறை, கட்டடக்கலை தொழில்நுட்பத் துறை, 'புரொடக்ட்' வடிவமைப்புத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாண்டின் 'எஃப்1' பந்தயத்தில் தொண்டூழியர்களாக உதவுகிறார்கள். இவர்களில் 50 பேர் கொடிகளை ஏந்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு தரமிக்க வேலை அனுபவத்தை வழங்கும் நோக்கில் தொழில்நுட்பக் கல்விக் கழகமும் சிங்கப்பூர் 'ஜிபி'யும் 2009ஆம் ஆண்டு முதல் இணைந்து பணியாற்றி வருகின்றன.
இந்தக் கூட்டுமுயற்சி இன்னும் ஏழு ஆண்டு நீடிக்கும்.
இதுவரை 10,000 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் தொண்டூழியம் செய்துள்ளனர்.