மோனலிசா
முதுபெரும் இந்திய இசைக்கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணன், 1984ஆம் ஆண்டு தோற்றுவித்த இந்திய இசை, கலைக்கழகம் இசைத்துறையில் சிறந்த தொண்டாற்றும் கலைஞர்களுக்கு ஆச்சார்ய ரத்னா எனும் விருதை வழங்கி கௌரவித்து வருகிறது.
இந்திய இசைத்துறையில் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விருது அண்மையில் சிங்கப்பூர் இசைக்கலைஞரான லலிதா வைத்தியநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இசைத்துறையில் 40 ஆண்டுகளுக்குமேல் ஈடுபட்டுள்ள இவர் இவ்விருதைப் பெற்ற முதல் சிங்கப்பூரர் ஆவார். அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற விழாவில், திரு. டி.வி. கோபாலகிருஷ்ணன் இவ்விருதை திருவாட்டி லலிதாவிற்கு வழங்கினார்.
இசையை மக்களிடம் எடுத்துச்செல்லும் கருவியாக 'ஆர்கெஸ்ட்ரா' எனும் பல்லிசைக் குழுவைக் கருதும் திருவாட்டி லலிதா, மக்கள் கழகத்தின் சிங்கப்பூர் இந்திய பல்லிசை, பாடகர் குழுவை 1985ஆம் ஆண்டில் அது நிறுவப்பட்டது முதல் வழிநடத்தி வருகிறார்.
இக்குழுவின் மூலம், இந்திய இசையைப் பிரதிநிதித்தும் கர்நாடக இசையையும் பிற இந்திய இசைகளையும் இணைத்து 'ஃபியூஷன்' முறையிலும் பல்வேறு இசைக் கச்சேரிகளையும் நிகழ்ச்சிகளையும் இவர் அரங்கேற்றினார்.
மேலும் 1991ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இசைத் திருவிழாவில் பங்குகொண்டு நிகழ்ச்சி படைத்த முதல் சிங்கப்பூர் பல்லிசைக்குழு என்னும் பெருமை இக்குழுவைச் சாரும்.
திருவாட்டி லலிதா, சிங்கப்பூரின் பல இன, பல சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இந்திய இசையுடன் சீன மலாய் இசைக்கருவிகளை இணைத்து நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். பிறநாட்டு இசைக் கலைஞர்களுடன் இணைந்து கலையை வளர்க்கும் நோக்கில் 'லலிதாஞ்சலி' என்னும் கலைப்பிரிவை 2015ஆம் ஆண்டில் தோற்றுவித்தார்.
கல்வி அமைச்சின் 'மியூசிக் லூப்ஸ் புரொஜெக்ட்' திட்டத்தில் இந்திய இசைக்கு மேற்பார்வையாளராகச் செயல்பட்ட இவர், "இந்த விருது எனக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. தொடர்ந்து இசைக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற உந்துதலும் இந்திய இசையின் ஆளுமையை அடுத்த தலைமுறையினருக்கு உணர்த்தி, கற்றுத்தர வேண்டும் என்ற ஆர்வமும் மேலோங்குகிறது," என்று கூறினார்.