உள்ளூர் இசைக்கலைஞர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் முதலியோரின் சாதனைகளை ஊக்குவிக்கும் வண்ணம் கடந்த 25 ஆண்டுகளாக காம்பஸ் விருது நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் இம்முறை விருதை வென்றுள்ளார் முன்னணி உள்ளூர் இசைக்கலைஞரான ஷபீர் தபாரே ஆலம் (படம்).
தனது 17 ஆண்டுகால கலைத்துறைப் பயணத்திற்கு கிடைத்த அங்கீகாரம் இது எனக் கூறிய ஷபீர், சிங்கப்பூரில் இந்திய, தமிழ் இசைப் படைப்புகளும் படைப்பாளர்களும் அதிகரிக்கவேண்டும் என்றார்.
விருதளிப்பு நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர் மற்றும் வர்த்தக, தொழில் அமைச்சுகளின் துணை அமைச்சர் லொ யென் லிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இசைத்துறையில் தான் கற்க வேண்டியது ஏராளம் என்ற ஷபீர், தன் இசையில் புதிய தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்துவதோடு வாழ்க்கையின் சாரத்தைப் பிரதிபலிக்கும் பாடல் வரிகளை உருவாக்கவும் முயல்வதாக சொன்னார்.
'யாயும் யாயும்' எனும் திரைப் பாடல் மூலம் தமிழ் இலக்கியத்தை உயர்த்திப் பிடித்த இவர், 'சிங்கை நாடு' எனும் தேசிய தின தமிழ்ப் பாடலை உருவாக்கினார். தமிழில் ஏழு திரைப்படங்களுக்குமேல் இசையமைத்துள்ள முதல் சிங்கப்பூரரான இவர், புதிய சிங்கப்பூர்ப் பாடகர்களை தமிழ்த் திரையிசையில் அறிமுகப்படுத்துவதாகக் கூறினார். சென்னையில் எடிசன் விருது நிகழ்ச்சியில் இவ்வாண்டின் சிறந்த அனைத்துலக இசைக் கலைஞர் விருது, 'கோன்னா ரைஸ் அப்' எனும் ஆங்கிலப் பாடலுக்கு கன்டென்ட் ஆசியா 2022 விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
செய்தி: மோனலிசா