மூன்று மாத ஏற்பாடுகளுக்குப் பிறகு, மார்சிலிங் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழு, நற்பணிப் பேரவையின் தொண்டூழியர்கள், மக்கள் கழக மலாய் நற்பணிச் செயற்குழுவின் 30 தொண்டூழியர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து ஏறத்தாழ 400 குடும்பங்களுக்கு நேற்று தீபாவளி அன்பளிப்புப் பைகளை வழங்கினர்.
புளோக் 185A உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 13ல் வசிக்கும் குடும்பங்களுக்குத் தீபாவளிப் பலகாரங்கள், உணவுப் பொட்டலங்கள் முதலியவை வழங்கப்பட்டன.
இத்தொண்டூழிய நிகழ்ச்சியில் தற்காப்பு, மனிதவள அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சரான ஸாக்கி முகம்மது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சில குடும்பங்களுடன் உரையாடியதோடு அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து, தீபாவளி அன்பளிப்புகளையும் வழங்கினார்.
இம்மாதம் 12ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை நற்பணிப் பேரவையும் மக்கள் கழக மலாய் நற்பணிச் செயற்குழுவும் சேர்ந்து சிங்கப்பூரின் பல்வேறு வட்டாரங்களில் வசிக்கும் மொத்தம் 3,500 வசதி குறைந்த குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளைத் தரும் நோக்கத்துடன் பணியாற்றி வருகின்றன.
இவ்வாண்டு தீபாவளி அன்பளிப்புகளை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல், மார்சிலிங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு, மார்சிலிங் வர்த்தகர் சங்கத்துடன் இணைந்து அவ்வட்டாரத்தில் தீபாவளி ஒளியூட்டு விழாவையும் நடத்தின.
ஒளியூட்டு விழாவை முன்னிட்டு பாரம்பரிய இந்திய விளையாட்டுகளை விளையாடுவது, மருதாணியிடுவது, இந்திய இசைக்கருவிகள் வாசிப்பது என பல இந்தியக் கலாசார அம்சங்களை பொதுமக்களிடம் கொண்டுசேர்க்கும் நோக்கில் மார்சிலிங் சமூக மன்றம் சிறிய பந்தலை அமைத்திருந்தது.
"குடியிருப்பாளர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களுடன் பழகுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர்களுடன் பேசியபோது, பலரும் நவம்பர் மாதத்தில் நாம் நடத்தும் தீபாவளிக் கலைநிகழ்ச்சியைக் காண ஆவலுடன் காத்திருப்பது தெரியவந்தது,"என்றார் மார்சிலிங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவர் சு. நந்தினி.
செய்தி: மாதங்கி இளங்கோவன்

