தலைசிறந்த நிர்வாகத்துக்கு வழங்கப்படும் ஆக உயரிய 'அறநிறுவன வெளிப்படைத்தன்மை விருதை' சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு சங்கம் பெற்றுள்ளது. இவ்விருதினை அறநிறுவன மன்றம் வழங்கியுள்ளது. அத்துடன் சிங்கப்பூர் சிறைத் துறை வழங்கும் மஞ்சள் நாடா விருதையும் சிண்டா பெற்றுள்ளது. இரண்டு விருது
களையும் சிண்டா முதல்முறையாக இவ்வாண்டு பெற்றுள்ளது.
சிண்டாவின் தெளிவான செயல்பாடுகள், சிறைபிடிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்காக முன்னெடுக்கும் பணி ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இவ்விரு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
'அறநிறுவன வெளிப்படைத்தன்மை விருது'க்கு கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு ஆதரவளிக்கிறது. வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கும் அறநிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
விருதுபெற்றது பற்றி சிண்டாதலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன் கூறுகை யில், "குடும்பங்கள், தனிநபர்களின் நிலையை உயர்த்த இந்திய சமூகத்தினர் சிண்டாவுக்கு வழங்கும் நிதி ஆதரவைக் கையாள முறையான நிர்வாகம் அவசியம்.
"சிண்டா மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ளவும் சமூகத்துக்கு நற்சேவை வழங்கவும் சிண்டா தொடர்ந்து தனது செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்ளும்," என்றார்.
புதன்கிழமை நடந்தேறிய 'அறநிறுவன வெளிப்படைத்தன்மை, நிர்வாக விருதுகள்' நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் திரு எட்வின் டோங், விருதுபெற்ற 85 வெற்றியாளர்களையும் வாழ்த்தினார்.
அங்கீகரிக்கப்பட்ட அறநிறுவன அமைப்புகளில் ஒன்றான ஸ்ரீநாராயண மிஷன், மூன்றாவது முறையாக அறநிறுவன வெளிப்
படைத்தன்மை விருதுபெற்றது. அமைப்பின் தலைவர் திரு ஜெயதேவ் உன்னிதன் இவ்விருதினைப் பெற்றுக்கொண்டார். முன்னதாக 2018, 2019ஆம் ஆண்டுகளிலும் ஸ்ரீநாராயண மிஷன் இவ்விருதைப் பெற்றிருந்தது.
இந்திய சமூகத்தின் பலதரப்
பினரின் வாழ்க்கைச் சிக்கல்களை களைய முயற்சி எடுத்துவரும் சிண்டா, 2020ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் சிறைத் துறையின் சிறை மறுஒருங்கிணைப்புத் திட்டத்தில் இணைந்து பணியாற்றி வருகிறது.
பெண்களின் சிறைச்சாலையான 'A4 இன்ஸ்டிட்டியூஷன்'ல் இருக்கும் இந்திய தாய்மார்களுக்குக் கைகொடுக்கும் வண்ணம், பிள்ளைகளுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வதற்குத் தேவையான உதவிகளை அளிக்க சிண்டா முற்பட்டுள்ளது.
சிறையிலிருந்து வெளிவந்த பின்னரும் அவர்களுக்கும் அவர்
களின் குடும்பங்களுக்கும் தொடர் ஆதரவு வழங்க சிண்டா முயற்சி எடுத்துள்ளது. அதன் முயற்சி
களுக்காக, மஞ்சள் நாடாவின் 'இரண்டாவது வாய்ப்பின் பிரதிநிதி' விருதினைப் பெற்ற சிண்டா, சிறைபிடிக்கப்பட்டோரின் தேவைகளை, தொடர்ந்து ஆராய்ந்து அறிந்துகொள்ளும் எண்ணம் கொண்டுள்ளது. சிறைத் துறையின் துணையுடன், உதவி தேவைப்படும் இந்தியர்களைக் கண்டறிந்து ஆரம்பக்கட்டத்திலிருந்தே உதவவும் அது திட்டமிட்டுள்ளது.
குழந்தைகளைப் பெரிதளவில் பாதிக்கும் காரணிகளுள் போதைப்பொருள் புழக்கம், வன்முறை முதலியவற்றில் பெற்றோர் சிறைபிடிக்கப்படுவதும் அடங்கும். குற்றச்செயல் குடும்பங்களில் தொடர்வதை தடுக்க, சிறைபிடிக்கப்பட்டோரின் மனதை மாற்ற தனது ஆதரவை நீட்டி வருவதாக சிண்டா கூறியது.

