ஆ. விஷ்ணு வர்தினி
வசதி குறைந்த சுமார் 1,000 குடும்பங்களுக்கு இம்மாதம் 6ஆம் தேதி தீபாவளிப் பலகாரங்கள், மதிய உணவு, முகக்கவசங்கள் அடங்கிய பொட்டலங்களை இந்து அறக்கட்டளை வாரியம் வழங்கியது.
தீபாவளியை முன்னிட்டு பல்வேறு பிரிவினருக்கு உணவு விநியோகம் செய்து வரும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தீபாவளி நன்கொடை முயற்சியை இது நிறைவு செய்து வைத்தது.
மக்கள் கழக நற்பணிப் பேரவையுடன் இணைந்து உணவு விநியோகம் செய்த இந்து அறக்கட்டளை வாரியம், கடந்த ஆண்டிலிருந்து தொடர்ந்து மாதந்தோறும் ஏறக்குறைய 2,500 பேருக்கு உணவு வழங்கி வருகிறது.
இம்முறை, தொண்டூழியர்களின் உதவியுடன் வாரியம் நேரில் சென்று உணவு விநியோகித்தது.
விழாக்காலத்தில், 'சன்லவ் இல்லம்', 'செரிபிரல் பால்சி அல்லாயன்ஸ் சிங்கப்பூர்', 'புளு கிராஸ் தொங் கெங் மதியிறுக்க நிலையம்' ஆகியவற்றில் உள்ள மொத்தம் 1,050 பேருக்கும் இந்து அறக்கட்டளை வாரியம் உணவு அளித்தது.
முனீஸ்வரன் சமூக சேவைகளுடன் இணைந்ததன் மூலம் 100 குடும்பங்கள் பலனடைந்தன. அத்துடன் மனிதவள அமைச்சு, 'ஏஸ்' குழுவுடன் இணைந்ததன் மூலம் 10 தங்குவிடுதிகளில் உள்ள 5,000 வெளிநாட்டு ஊழியர்களும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இம்முயற்சியால் பயனடைந்தனர்.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக சேவைக் குழுவின் தலைவர் சுசிலா கணேசன், இது பற்றி தமிழ் முரசிடம் கூறுகையில், "இந்துக்களின் வாழ்வியலில் முக்கியப் பங்கு வகிக்கும் சனாதன தர்மத்தை வலியுறுத்துவதற்கு நாங்கள் முன்னெடுக்கும் பல முயற்சிகளில் இதுவும் ஒன்று.
"தனியாக இந்த உதவிகளை செய்வதைவிட, பற்பல இயக்கங்களுடன் இணைந்து செயல்படும்போது அதன் தாக்கம் அதிகமாக உள்ளது," என்றார்.
கொவிட்-19 பெருந்தொற்று 2020ஆம் ஆண்டில் தொடங்கியது முதல் இந்து அறக்கட்டளை வாரியத்தின் உணவு விநியோக முயற்சியும் தொடங்கியது.
பல விதிமுறைகளால் கட்டுப்பட்டிருந்த அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சுகாதாரமான முறையில் உணவு விநியோகிக்க உதவிய தொண்டூழியர்களின் அரும்பணியைக் குறிப்பிட்டார் திருமதி சுசிலா.
விழாக்காலத்தைத் தவிர்த்து, மாதந்தோறும் வீட்டில் தனியே வாழும் முதியவர்களுக்கு உணவளிப்பதையும் இந்து அறக்கட்டளை வாரியம் தொடரவிருக்கிறது.
இத்திட்டங்களுடன் எதிர்காலத்தில் வெவ்வேறு சமூக தேவைகளுக்கேற்ப திட்டங்களை வகுக்கும் எண்ணம் கொண்டுள்ளதாக திருமதி சுசிலா குறிப்பிட்டார்.