இந்தியாவிலிருந்து கடல் கடந்து சிங்கப்பூருக்குப் பணிபுரிய வந்த வெளிநாட்டு ஊழியர்களை ஒன்றிணைக்கும் வகையில் அண்மையில்
கிரிக்கெட் போட்டி ஒன்று நடத்தப் பட்டது. 'தப்லா!' வாரஇதழ், 'ஸீ எண்டர்டெயின்மென்ட்', 'வெஸ்ட்லைட்' தங்குவிடுதி ஆகியன இணைந்து 'வெஸ்ட்லைட் ஒருங்கிணைப்புக் கிண்ண கிரிக்கெட் போட்டி'யை கடந்த 18ஆம் தேதி (ஞாயிறு) நடத்தின.
அனைத்துலகப் புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு நடத் தப்பட்ட போட்டியில் வெளிநாட்டு ஊழியர்கள், தொழில்துறைத் தலைவர்கள், தேசிய விளையாட்டு வீரர்கள், 19 வயதுக்குக் குறைவான இளையர்கள் ஆகியோர் அணிகளாகப் பிரிந்து விளையாடினர். சிங்கப்பூர் இந்தியர் சங்கம், சிலோன் விளையாட்டு மன்றம் ஆகிய திடல்களில் போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.
"இந்தியாவிலிருந்து வந்த எங்களை கிரிக்கெட் விளையாட்டு ஒன்றிணைக்கிறது. இந்த விளையாட்டு எங்கள் வாழ்வில் பின்னிப் பிணைந்துவிட்டது," என்றார் திரு ஜெகன்னாத் இளங்கோவன், 35.
'சிஎஸ்சி ட்ரூப்ர்ஸ்' அணியின் தலைவராக இருக்கும் இவர், 12 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இருக்கிறார். தற்போது சிங்டெல் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கும் திரு ஜெகன்னாத், சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து ஒவ்வொரு வாரயிறுதி தவறாமல் சிலோன் விளையாட்டு மன்றத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த திரு அந்தோணி ராஜ், 25, பத்து வயதிலிருந்து கிரிக்கெட் விளையாடி வருவதாகக் கூறினார். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது தமது நீண்டநாள் ஆசை என்றும் அது சிங்கப்பூரில் நிறைவேறியது தமக்கு பெருமகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.
எம்ஆர்டி ரயிலில் சென்றபோது, சிங்கப்பூர் கிரிக்கெட்டுக்கு அறிமுக மானார் திரு ரமேஷ் சுந்தரம், 44. 13 ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் இவர், ரயிலில் கிரிக்கெட் மட்டையை ஒருவர் வைத்திருப்பதைக் கவனித்தார். அவரை அணுகிய திரு ரமேஷ் அவருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டார்.
சிங்கப்பூரில் கிரிக்கெட் விளையாட நண்பர் ஒருவர் கிடைத்துவிட்டார் என்ற அந்த மகிழ்ச்சியான தருணத்தை நினைவுகூர்ந்த திரு ரமேஷ், கிரிக்கெட் தன்னுடைய உடம்பில் ஓடும் ரத்தம்போல என்றார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இவர், 'பாலஸ்டியர் சூப்பர் கிங்ஸ்' அணியின் மேலாளராக இருக்கிறார்.
இலங்கையின் கொழும்பு நகரி லிருந்து சிங்கப்பூர் வந்த டெனுலா சாத்மோல் பாலசூரியாவின் வயது 18. சிங்கப்பூரில் 11 மாதங்களாக இருக்கும் இவர், இங்கு வந்ததிலிருந்து 25 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். ஆக இளைய விளையாட்டாளராகப் பங்கேற்ற இவர், 6 வயதிலிருந்து கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். தற்போது சிங்கப்பூரில் பட்டயக் கல்வி பயிலும் டெனுலா, வாரம் மூன்று முறை கிரிக்கெட் விளையாடுகிறார். "கிரிக் கெட்டில் வெற்றி, தோல்வி என எது வும் இல்லை. இந்த விளையாட்டில் அனைவரும் சமம்," என கூறினார் அவர்.
சிலோன் விளையாட்டு மன்றத்திலும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
வெஸ்ட்லைட் தங்குவிடுதி மேலா ளர் திரு பாகுர்டீன் அ. மஜித், "இந்தப் போட்டி, வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளூர் சமூகத்துடன் ஒன்றிணைய உதவுகிறது. கிரிக்கெட்டை விளையாட ஏற்பாடு செய்தது ஊழியர்களின் மன இறுக்கத்தைத் தளர்த்தும் என நம்புகிறேன்," என்றார்.
இந்த விடுதியிலிருந்து வந்திருந்த ராஜாங்கம் பரணிதரன், 25, சிங்கப்பூரில் கிரிக்கெட் விளையாடுவதற்கான வசதிகளைக் கண்டு வியந்தார். "ஒவ்வொரு வாரமும் இப்படி ஒரு போட்டி நடந்தால் நான் கலந்துகொள்வேன்," என்றார் அவர்.
அனுஷா செல்வமணி

