யுகேஷ் கண்ணன்
உலகக் கிண்ண காற்பந்து இறுதிப் போட்டியன்று சிங்கையில் பார்த்து ரசிக்க மற்றொரு காற்பந்தாட்டப் போட்டியும் இடம்பெற்றது.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நற்பணிப் பேரவையின் இளையர் குழுவால் நடத்தப்பட்டு வரும் டாக்டர் பாலாஜி சதாசிவன் கிண்ண காற்பந்தாட்டப் போட்டி, ஈராண்டு கிருமித்தொற்று முடக்கத்திற்குப் பிறகு இம்மாதம் 18ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற்றது.
பத்தாவது முறையாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 21 வயதுக்கும் குறைவான ஆண்கள் பிரிவு, 35 வயதுக்கும் குறைவான ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என மூன்று பிரிவுகளில் 32 குழுக்கள் பங்கேற்றன. போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் துணைத் தலைவர் பிரெவேஷ் சிங், சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்திய காற்பந்தாட்டப் போட்டிகளில் இப்போட்டியும் ஒன்றென்பது மிகுந்த பெருமிதமாக உள்ளதாகக் கூறினார்.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவரான 19 வயது பிரெவேஷ், மறைந்த முன்னாள் அமைச்சர் டாக்டர் பாலாஜி சதாசிவன் நினைவைப் போற்றுவதோடு இந்திய சமூகத்தினரிடையே ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதும் இப்போட்டியின் நோக்கமென பகிர்ந்துகொண்டார். பல இந்திய இளையர்கள் ஒரே இடத்தில் கூடி தங்கள் காற்பந்தாட்டத் திறன்களை வெளிப்படுத்திய காட்சி மனதை நெகிழ வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
போட்டியின் பங்கேற்பாளர்
களுள் ஒருவரான இளமாறன் தியாகராஜன், 35, போட்டித்தன்மைமிக்க சூழலில் மற்ற இந்தியர்களுடன் சேர்ந்து விளையாடியது நல்ல அனுபவமாக அமைந்ததென்றும் இத்தகைய போட்டிகள் புதிய நண்பர்களைப் பெற பெரிதளவு உதவுகிறது என்றும் கூறினார். இப்போட்டியில் முதல்முறையாகப் பங்கேற்ற அர்ஜுன், 21, காலையில் காற்பந்து விளையாடிவிட்டு, பிறகு நண்பர்களுடன் இரவில் உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தைப் பார்த்தது சுவாரசியமான அனுபவமாக இருந்ததெனக் கூறினார்.
‘லா பிளாட்டா ஜூனியர்ஸ்’ என்ற அணி, போட்டியின் 3 பிரிவுகளிலும் வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.