கிறிஸ்துமஸ் உணர்வைத் தங்கள் நெருங்கிய நட்பு வட்டாரத்திற்குப் பரப்பும் விதமாக திருமதி லீனா குமாரவேலு, 26, அவரின் கணவர் திரு விவேக் ஆனந்த் ஸ்வாமிநாதன், 29, கிறிஸ்துமஸ் பண்டி கையை ஒரு வாரத்திற்கு முன் வீட்டில் கொண்டாடினார்கள்.
இந்திய பாரம்பரிய உணவு வகைகளையும் சமைத்து, ‘ஸ்ப்பைஸ்ட் ஹாட் கோகோ’ குளிர்பானத்தையும், ‘ஸ்பியர்மின்ட் கேரமல்’ தேநீரையும் நெருங்கிய நண்பர்கள் சுவைத்து உண்ணும் வகையில் அமைந்தது இவர்களின் கிறிஸ்துமஸ் விருந்து.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமான இந்தத் தம்பதியினர், திருமணத்திற்குப் பிறகு, இரண்டாவது முறையாக கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள். கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் இவ்வாண்டு பண்டிகையை இன்பமாகக் கொண்டாட முடிந்தது.
இந்து மதத்தை சேர்ந்த இவ்விருவரின் வீட்டில், கிறிஸ்துமஸ் உணர்வு பரவி இருக்கும் விதமாக, கண்களைக் கவரும் அலங்கார விளக்குகளும் 1.8 மீட்டர் உயரம் கொண்ட கிறிஸ்துமஸ் மரமும் பிரகாசமாய் காட்சியளித்தன.
இந்தியாவில் பிறந்த திருமதி லீனாவிற்கு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் புதிதல்ல.
இவரின் தாத்தா கிறிஸ்துமஸ் அன்றுதான் பிறந்தார். அதோடு, விடுமுறைக்கு இந்தியா செல்லும் போதெல்லாம், இவர் குடும்பத்தினர் திராட்சைக் குளிர்பானம், பழ கேக் ஆகியவற்றை சுவைத்து இயேசுவின் பிறந்தநாளைக் கொண்டாடியதுண்டு.
கிறிஸ்துமஸ் தனக்கு ஓர் அபூர்வ விழாக்கால அனுபவத்தை தருவதாகக் கூறும் திருமதி லீனா, கிறிஸ்துமஸ் தினத்தன்று, ‘ஹாரி பாட்டர்’ கதையை மையமாக வைத்து பண்டிகையைக் கொண்டாடி னார்.
கணவரின் உதவியோடு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஏற்பாடுகளைச் செய்த திருமதி லீனா, நண்பர்கள் மகிழும் வண்ணமாக பல விளையாட்டுகளை விளையாடி, படங்கள் பார்த்து, அவர்களுக்காக கிறிஸ்துமஸ் பரிசுகளையும் தயாரித்தார்.
“என்னதான் நோய்த்தொற்று காலம் முடிவடைந்தாலும், ஆடம்பரமாக பண்டிகையைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, எங்கள் வாழ்வில் முக்கியப் பங்காற்றும் நெருங்கிய நண்பர்களை மட்டுமே இவ்வாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு அழைத்திருந்தோம்,” என்றார் திருமதி லீனா.
கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட தகவல் தொழில்நுட்பத் துறைத் தொழில் பகுப்பாய்வாளர் ஐஸ்வர்யா, 26, “எனக்குப் பிடித்தமான நகச்சாயம் எனக்குப் பரிசாக கிடைத்தது. என் தோழியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என் மனதிற்கு நிறைவாக அமைந்தது,” என்றார்.