ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லம் கிறிஸ்துமஸ் குதூகலத்தில் மூழ்கியுள்ளது. அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களுக்காக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, புதுவிதமான நடவடிக்கை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிறிஸ்துமஸ் உணர்வை இல்லவாசிகளுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில், அங்கு பணிபுரிபவர்கள் இல்லவாசிகளுடன் ஒன்றிணைந்து காலுறைகளில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களை செய்தனர்.
கண்கவரும் விதத்தில் அலங்கரிக்கப்பட்ட அந்தக் காலுறைகள், குடியிருப்பாளர்களின் படுக்கைகளில் இம்மாதம் 12ஆம் தேதியிலிருந்து தொங்கவிடப்பட்டன.
காலுறைகளை அலங்கரித்தது மட்டுமின்றி, குடியிருப்பாளர்கள் ஒன்றுகூடி சிறிய பனிமனிதன் பொம்மைகளையும் இல்லத்தைச் சுற்றி பண்டிகைக் கால பொலிவை உருவாக்க அலங்காரங்களையும் செய்தனர்.
இல்லவாசிகளின் கைவினை, படைப்புத் திறன்களை வெளிக்காட்டும் விதமாக இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றன.
81 வயதாகும் குடியிருப்பாளர் திருவாட்டி பூங்காவனம், பிற குடியிருப்பாளர்களுடன் ஒன்றிணைந்து பனிமனிதன் பொம்மைகளைச் செய்தது தமக்கு இன்பத்தை அளித்ததாகக் கூறினார்.
அவர்களுடன் இணைந்து ஈடுபட்ட இந்த நடவடிக்கையின் மூலம் தாங்கள் ஒருவருக்கொருவர் ஊக்கமளித்துக்கொண்டதையும் அவர் பகிர்ந்துகொண்டார்.